இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையாகத் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர், டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியிலுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் (N.C.B.) இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞருடன் நேரில் (02.04.2024) இன்று ஆஜரானார். இதனையடுத்து அமீரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது விசாரணை நிறைவடைந்துள்ளது.
இயக்குநர் அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தை ஜாபர் சாதிக் தயாரித்து வந்ததால் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.