குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்புப் பணிகளில் உதவியதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விமானப்படை நன்றித் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 8- ஆம் தேதி அன்று குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள், விமானப்படை அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தின் போது, மீட்புப் பணிகளில் உடனடியாகவும், நீடித்த அளவிலும் உதவிகளை அளித்ததற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக, இந்திய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
துயரகரமான ஹெலிகாப்டர் விபத்தின் போதும், மீட்புப் பணிகளிலும், காயமடைந்தவர்களைக் காப்பாற்றும் பணிகளிலும் உதவியதற்காக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவலர்களுக்கும், காட்டேரி கிராம மக்களுக்கும் விமானப்படை நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.
விபத்து நடந்த உடனேயே காட்டேரி கிராம மக்களும், காவலர்களும் விரைந்து சென்று உடனடியாக மீட்புப் பணிகளில் இறங்கியதோடு, அப்பகுதிகள் பெட்ஜீட்டுகள், கம்பளிகளை அளித்து காயமடைந்தவர்களை விபத்து பகுதியில் இருந்து மீட்க உதவியிருந்தனர்.
விபத்து நடத்த உடனேயே நடைபெற்ற மீட்புப் பணிகளால் மூன்று காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, சிறப்பு மருத்துவ குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த சூழலில் விமானப்படை தனது நன்றியை தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.