கோவை சங்கனூர், சண்முக நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் ( 28). இவர் தனியார் நிறுவனத்தில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி ( 20). அண்மைக்காலமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இந்நிலையில் ராஜேஷ் தனது மனைவி சரஸ்வதி மற்றும் நண்பர்களுடன் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் இருக்கும் சித்திரைச்சாவடி தடுப்பணைக்குக் குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது சரஸ்வதி ஆழமான பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படும் நிலையில் அவர் தண்ணீரில் மூழ்கினார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஷ் மற்றும் அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு வந்து பலமணி நேரம் போராடி சரஸ்வதி உடலை மீட்டனர். பின்னர் அவரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடுப்பணையில் குளிக்கச்சென்ற பெண் நேரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.