ADVERTISEMENT

திருமணம் மீறிய உறவு; கணவன் கொடூரக் கொலை; மனைவியுடன் இளைஞர் கைது

07:12 PM Oct 16, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருமணம் மீறிய உறவின் காரணமாக மனைவியே கட்டிய கணவனைக் கொன்றிருப்பது தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி நகரையே பதைபதைக்க வைத்திருக்கிறது.

ஆளரவமற்ற புளியங்குடி நகரின் நவாப் சாலை அன்றைக்குப் பரபரப்பாக காணப்பட்டது. மக்களின் கூட்டம் அரக்கப்பறக்க திரண்டிருந்தது. காரணம், சாலையின் ஓரமாக நடுத்தர வயதுடைய ஒருவர் தலை, கழுத்துப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த தகவல் புளியங்குடி காவல் நிலையம் வரை போக, புளியங்குடி டி.எஸ்.பி. அசோக், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி விசாரணையை மேற்கொண்டனர்.

உயிரிழந்து கிடந்தவர் அருகிலுள்ள வாசுதேவநல்லூரிலிருக்கும் ஒரு ஹோட்டல் ஒன்றில் வடை மாஸ்டராக பணியிலிருக்கும் மாரியப்பன் என்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் அதிகாலை தன் மனைவி கனகாவிடம் இரு சக்கர வாகனத்திற்குப் பெட்ரோல் போட்டுவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்ற மாரியப்பன் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ள நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாரியப்பன் கனகா தம்பதியரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருகிற உறவினரான திருமணமாகாத விக்னேஷ் என்ற இளைஞனை சந்தேகத்தின் பேரில் கஷ்டடிக்குக் கொண்டு வந்து விசாரித்த போலீசாரிடம், நடந்தவற்றை விவரித்திருக்கிறார் விக்னேஷ்.

மாரியப்பன் கனகா தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். பல ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்துடன் கேரளாவுக்கு இடம் பெயர்ந்தவர்கள் அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்திருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் வாசுதேவநல்லூருக்கு வந்திருக்கிறார்கள். மனநலம் சார்ந்த பிரச்சனையில் இருந்த மாரியப்பன், மனநோய் தாக்கம் குறித்து சிகிச்சையும் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில்தான், வாலிபர் விக்னேஷுக்கு மாரியப்பனின் மனைவி கனகாவுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியுள்ளது. இது உறவினர்கள் மூலம் கணவர் மாரியப்பனுக்குத் தெரிய வந்திருக்கிறது.

இதனால் ஆத்திரமான மாரியப்பன், மனைவி மற்றும் விக்னேஷையும் கண்டித்துள்ளார். தான் கடனாக விக்னேசுக்குக் கொடுத்த 6 லட்சத்தைத் திரும்பிக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், தனது தொடர்புக்கு தடையாக இருக்கிற மாரியப்பனைக் கொலை செய்கிற கொடூர முடிவுக்கு வந்திருக்கிறார். மனைவி கனகாவும் அவனது திட்டத்திற்கு ஒத்துப் போயிருக்கிறார்.

இவர்களின் கொடூர திட்டத்திற்கு வாய்ப்பாக அக்.13 அன்று விடிவதற்கு சற்று முன்னதாக வீட்டை விட்டுப் புறப்பட்ட மாரியப்பன், தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வருவதாக மனைவியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். உடனே தகவலைத் தனது செல்போன் மூலம் விக்னேஷிடம் தெரிவித்திருக்கிறார் கனகா. சற்றும் தாமதிக்காமல் விக்னேஷ் மாரியப்பனைத் தொடர்பு கொண்டு புளியங்குடியிலுள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துத் தருகிறேன். தனக்கு பணம் கிடைத்திருக்கிறது. தனக்கு கொடுத்த பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு செல்போன் மூலம் சொல்லியிருக்கிறார்.

இதனை நம்பிய மாரியப்பன் பைக்கில் செல்ல, அவரைப் பின் தொடர்ந்து மற்றொரு பைக்கில் சென்ற பால் வியாபாரி விக்னேஷ், புளியங்குடியின் ஆளரவமற்ற நவாப் சாலையில் செல்கிறபோது மாரியப்பன் பைக் மீது மோத அவரது பைக் துண்டாகப் போய் விழுந்திருக்கிறது. அப்போது அவரை எழுந்திருக்க விடாமல், விக்னேஷ் தான் கொண்டு வந்த இரும்புக் கம்பியால் மாரியப்பனைத் தாக்கியதுடன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததை விசாரணையின் போது விக்னேஷ் தெரிவித்ததாக சரக காவல் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

தற்போது பால் வியாபாரி விக்னேஷ், கொலைக்குத் துணை போன கனகா இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை சிவகிரி நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT