Skip to main content

'முறையற்ற தொடர்புக்கு இடைஞ்சல்... மிஸ்டுகால் கொலை...'-மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

'Missed call incident... Improper contact...'-Wife's sensational confession!

 

தென்காசி மாவட்டத்தின் சுரண்டைப் பக்கம் உள்ள வென்றிலிங்கபுரத்தின் வைரசாமிக்கும், அதன்பக்கமுள்ள வீரசிகாமணியைச் சேர்ந்த முத்துமாரிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. தம்பதியிருக்குக் குழந்தை இல்லை. இருவரும் வீரசிகாமணியிலுள்ள பர்னிச்சர் பொருட்களைத் தவணை முறையில் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள்.

 

கடந்த 19ம் தேதி அன்று தம்பதியர் இருவரும் வேலையை முடித்துவிட்டு வீரசிகாமணியின் நடுவக்குறிச்சியின் சமத்துவபுரம் அருகே பைக்கில் வரும்போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று வைரவசாமியைக் கட்டையாலும் கற்களாலும் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்பு அந்தக் கும்பல் முத்துமாரி அணிந்திருந்த 30 கிராம் நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடியது. தகவலின்பேரில் சம்பவ இடம் வந்த சேர்ந்தமரம் போலீசார் வைரவசாமியின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

 

'Missed call incident... Improper contact...'-Wife's sensational confession!

 

இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் எஸ்.ஐ. வேல்பாண்டியன் முத்துமாரியிடம் தீவிரமாக விசாரணை செய்ததில் காதலன் மற்றும் அவரது நண்பர்களுடம் கணவரைத் திட்டமிட்டு கொலை செய்திருப்பதும், அதைமறைக்க நகைக்காகக் கொலை செய்தது போன்று மனைவியே நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

 

மேலும் முத்துமாரி கொடுத்த வாக்குமூலத்தில், நானும் வைரவசாமியும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்ததால் மூன்று ஆண்டுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்தோம். திருமணத்திற்கு முன்பே வாலிபர் இசக்கிமுத்துவையும் காதலித்து வந்தேன். ஆனால் பெற்றோர் கட்டாயத்தின்பேரில் வைரவசாமியைத் திருமணம் செய்துகொண்டேன். இதன்பிறகும் இசக்கிமுத்துவுடன் பழக்கத்தைத் துண்டிக்க மனம் இல்லாததால் தொடர்ந்து அவருடன் பழகினேன். இது எனது கணவருக்குப் பிடிக்கல. அதனால் அடிக்கடி என்னைக் கண்டித்தார். அதனால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

 

அதனால் இசக்கிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த நான் வழக்கம் போல் பணி முடிந்து திரும்பும் போது இசக்கி முத்துவிற்கு தகவல்கொடுத்தேன். திட்டப்படி காத்திருந்த அவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு பைக்கில் வந்தபோது வழிமறித்துக் கணவரை அடித்துக் கொலை செய்தனர். நகைக்காகக் கொலை செய்வது போன்று இருந்தால் யாரும் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்று நினைத்தோம். என்னுடைய பதற்றம் காரணமாக போலீசார் விசாரணையில் மறைக்க முடியவில்லை என்றிருக்கிறார்.

 

'Missed call incident... Improper contact...'-Wife's sensational confession!

 

இதன்பின் முத்துமாரியைக் கைதுசெய்த போலீசார் வீரசிகாமணியைச் சேர்ந்த இசக்கிமுத்து, நண்பர்கள், காளிராஜ், அங்குராஜ் ஆகியோர் அங்குள்ள மலைப்பகுதியில் பதுங்கியிருந்தபோது அவர்களைக் கைது செய்தனர்.

 

கைதான இசக்கிமுத்துவோ தான் கொடுத்த வாக்குமூலத்தில், நாங்கள் ஆறு ஆண்டாகக் காதலித்து வந்தோம். ஆனால் முத்துமாரியை அவரது பெற்றோர் வைரவசாமிக்கு திருமணம் முடித்துவிட்டனர். அதன்பிறகும் தொடர்ந்து காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு வைரவசாமி இடையூராக இருந்ததால் அவரைக் கொலை செய்ய திட்டம் போட்டோம். திட்டப்படி அவர்கள் வேலை முடித்துக் கிளம்பியதும் முத்துமாரி எங்களுக்கு மிஸ்டுகால் கொடுத்தார். வழியில் காத்திருந்த நாங்கள் அவர்கள் வருவதையறிந்து அவர்களின் பைக்கை வழிமறித்து வைரவசாமியைக் கட்டையால் தாக்கி கொலை செய்தோம் என்று கூறியதாக தெரிவித்த போலீசார், கைதானவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.