ADVERTISEMENT

“ஒரு பொண்ணு பிட்னஸ்காக வெளியே வந்தா இப்படியா ச்சீ...” - பாலத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை; டான்ஸ் மாஸ்டருக்கு சிறை

07:40 AM Jun 15, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை அடுத்த மேடவாக்கத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக அந்தப் பெண் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை பள்ளிக்கரணையை அடுத்துள்ள வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 11 ஆம் தேதி மேடவாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் மீது நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்பொழுது பாலத்தின் மேலே நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கும்படி உரசி விட்டுச் சென்றுள்ளார். அங்கிருந்து நகர்ந்து சென்ற பெண்ணை தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட அதிர்ந்து போன அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

நடந்தவற்றை அழுது கொண்டே அப்பெண் வீடியோவாக பதிவு செய்து அவருடைய இணையக் குழுவில் பதிவிட்டுள்ளார். அதில் ''நான் பாட்டுக்கு நடந்து போய்க் கொண்டிருந்தேன். வாக்கிங் போனாலும் பிரச்சனை சைக்கிளிங் போனாலும் பிரச்சனை. ஒரு பொண்ணு பிட்னஸ்காக ஒரு விஷயத்தை செய்தால் அட்லீஸ்ட் டிஸ்டர்ப் பண்ணாம இருக்கலாம். இப்படி கேவலமான ஒரு விஷயத்தை பண்ணினால் ச்சீ'' எனத் தெரிவித்துள்ளார். மேலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த நபரின் புகைப்படத்தையும் பெண் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை அவரது குழுவில் இருந்த ஒருவர் தமிழக டிஜிபியின் நேரடி பார்வைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடமிருந்து புகாரைப் பெற்ற போலீசார், தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். புகைப்படத்தை வைத்துத் தேடியதில் சென்னை ஆதம்பாக்கத்தில் பதுங்கி இருந்த திருச்சியைச் சேர்ந்த 22 வயதான நடனப் பயிற்சியாளர் அகிலன் என்பவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அகிலன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அகிலனை சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT