கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய கஜா புயலின் போது சிவகுமாரின் வீடு இடிந்து விழுந்துள்ளது. இதனால் வீடு இல்லாமல் சிவக்குமார் குடும்பத்தினர் இருந்துள்ளனர். கஜா புயலுக்கு பிறகு சிவக்குமாருக்கு விவசாய வேலையும், கூலி வேலையும் கிடைக்காமல் வறுமையில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலுடன் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் மீது சண்டை போட்டுள்ளார். குறிப்பாக அவரது மனைவியிடம் அடிக்கடி சண்டைப் போட்டுள்ளார். சிவக்குமார் தினமும் மனைவி கூட சண்டை போடுவதை பார்த்த அவரது மகள் நதியா சிவகுமாரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். தனது மகள் கோபப்பட்டு சில நாட்களில் பேசி விடுவார் என்று நினைத்த சிவக்குமாருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. கோபமான நதியா 8 மாதங்களுக்கு மேல் தனது தந்தை சிவக்குமாரிடம் பேசவில்லை. தனது மகள் தன்னிடம் 8 மாதங்களுக்கு மேல் பேசாமல் இருப்பதை நினைத்து மிகவும் மனம் வருத்தியுள்ளார் சிவக்குமார்.
பின்பு தனது மகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அப்போதும் தனது தந்தையை மன்னிக்கவில்லை. பின்பு நான் என்ன செய்தால் என்னுடன் நீ பேசுவாய் என்று தனது மகளிடம் கேட்டுள்ளார் சிவக்குமார். அதற்கு நதியா இனிமேல் அம்மாவிடம் நீங்கள் சண்டை போடக் கூடாது. அப்புறம் நான் படிக்கும் பள்ளி அருகே உள்ள கருங்குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் அபோது தான் நான் உங்களிடம் பேசுவேன் என்று கூறியுள்ளார். தன் மகள் நதியாவுக்காக சிவக்குமார் சாப்பிடாமல் கூட குளத்தைச் சுத்தம் செய்துள்ளார். அவருடன் அவரது மனைவியும் சேர்ந்து சுத்தம் செய்துள்ளார். இதன் பிறகே அவரது மகள் நதியா தனது அப்பா சிவக்குமாரிடம் பேசியுள்ளார். சிவகுமாரும் அவரது மனைவியும் குளத்தை சுத்தம் செய்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதோடு கணவன், மனைவி சண்டையை அவரது மகள் இவ்வளவு எளிதாக சமாதானம் செய்தது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.