ADVERTISEMENT

அதிகாலையில் தாய், மகளுக்கு சரமாரி கத்திக் குத்து... மக்கள் திரண்டதும் தப்பி ஓடிய கணவன்! 

03:04 PM Oct 01, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது குலதீபமங்கலம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை - பூங்காவனம் தம்பதி. இவர்களது மகள் பவானியை (25) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வைப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (30) என்ற இளைஞருக்குத் திருமணம் செய்துகொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது தகராறு இருந்துவந்துள்ளது. இதன் காரணமாக பவானி சமீபத்தில் கோபித்துக்கொண்டு குல தீபமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

இந்த நிலையில், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பவானி தனது கணவரின் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பவானி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்து வந்து சமரசம் பேசி அனுப்பிவைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (29.09.2021) சுரேஷ் தனது மாமியார் வீடான குலதீபமங்கலம் கிராமத்திற்குச் சென்றுள்ளார். இரவு அங்கு தங்கிவிட்டு அதிகாலை எழுந்து தனது ஊருக்கு கிளம்பும்போது மாமியாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், மாமியாரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். பூங்காவனத்தின் அலறல் சத்தம் கேட்டு பவானி எழுந்து ஓடிவந்து சம்பவத்தைப் பார்த்துவிட்டு கணவரைத் தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மனைவியையும் சுரேஷ் கத்தியால் குத்தியுள்ளார். இதில் இருவர் அலறும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது தாயும் மகளும் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். ஊர் மக்கள் திரண்டதைக் கண்ட சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பலத்த காயமடைந்த தாய், மகள் இருவரையும் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மணலூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார். மாமியார், மனைவி இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சுரேஷை தீவிரமாக தேடிவருகின்றனர். இரு பெண்களைக் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT