ADVERTISEMENT

கல்லூரி மாணவருக்காக மனைவி செய்த கொடூரச் செயல்! - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்!

05:27 PM Mar 04, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அடுத்துள்ளது விக்கிரவாண்டி. இந்த ஊரின் அருகே உள்ள பூவரசன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாயம். இவர் சென்னையில் தங்கி வேலை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார். இவரது மகன் லியோ பால், வயது 31. இவர், ஊர் ஊராகச் சென்று பச்சை குத்தும் வேலை செய்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 25 ஆகிய இருவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு, பெற்றோர்கள் நிச்சயித்த வண்ணம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும் 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

லியோ பால், அவரது குடும்பத்துடன் பூவரசன் குப்பம் பகுதியில் வசித்து வந்துள்ளார். அவரது வீட்டுக்கு அருகில் 20 வயது மாணவன் தனது தாய், தந்தையுடன் வசித்துவந்துள்ளார். அந்த மாணவர், திண்டிவனம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர், லியோ பால் மனைவிக்குத் தேவையான சிறு சிறு உதவிகளைச் செய்து வந்துள்ளார். தங்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞன் தனது மனைவிக்கு உதவி செய்வதை லியோபால் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.

அந்த வாலிபர், லியோ பால் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததன் காரணமாக லியோ பால் மனைவிக்கும் அவருக்கும் நெருக்கம் அதிகமாகி, அது தகாத உறவாக மாறியுள்ளது. அக்கம் பக்கத்தினர் உட்பட யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் ஏற்படாத அளவில் இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி தனது உறவினர் ஒருவர் திருமணத்திற்கு லியோ பால் சென்றதாகவும் அதன்பிறகு அவர் வீடுவந்து சேரவில்லை எனவும் அவரது மனைவி, சென்னையிலிருந்த தனது மாமனார் சகாயத்திற்குத் தகவல் கூறியுள்ளார். இதையடுத்து சகாயம் சென்னையிலிருந்து புறப்பட்டுவந்து அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வீடுகளில் காணாமல் போன லியோ பாலை தேடிப்பார்த்தார். லியோ பால் கிடைக்கவில்லை.

இது குறித்து சகாயம் தனது மருமகளிடம், “மகனைக் காணவில்லை கண்டுபிடித்துத் தருமாறு விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார்..” அளிக்கப்போவதாக கடந்த 21ஆம் தேதி இரவு கூறியுள்ளார். இதற்கு, மறுநாள் காலை முதல் ஸ்டெல்லாவும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவனும் திடீரென்று மாயமாகியுள்ளனர். ஸ்டெல்லா வீட்டில் குழந்தைகள் மட்டும் தனியாக இருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் லியோ பாலின் தந்தை சகாயத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சகாயம் அங்கு விரைந்து வந்துள்ளார். அவர் விசாரித்தபோது இருவரும் தலைமறைவாகி உள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தன் மகன் லியோ பால் காணாமல் போனது குறித்தும் தற்போது மருமகளும் பக்கத்து வீட்டு இளைஞனும் திடீரென்று காணாமல் போயுள்ளது குறித்தும் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த விக்கிரவாண்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனடிப்படையில், அந்த வாலிபருடன் கல்லூரியில் படிக்கும் அவரது நெருங்கிய நண்பரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த தகவல்கள் போலீசாருக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

அவர் அளித்த தகவல்கள், “லியோ பால் வீட்டிற்கு என் நண்பன் அடிக்கடி சென்றதன் காரணமாக இருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இந்த செய்தி லியோ பாலுக்குத் தெரியவந்துள்ளது. அவர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், இருவரும் தங்கள் உறவைக் கைவிடாமல் தொடர்ந்துள்ளனர். இதனால், ஸ்டெல்லா மற்றும் அவரது கணவர் லியோ பால் ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் ஒரு நாள் லியோ பால், வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை நேரில் கண்டு கடும் கோபத்துடன் கண்டித்துள்ளார்.

இதையடுத்து, அவர்கள் இருவரும் சேர்ந்து, யாருக்கும் தெரியாமல் லியோ பாலை கொலைசெய்து புதைத்து விட்டால், நாம் இருவரும் எப்போதும் இணைந்து இருக்கலாம் என்று திட்டம் தீட்டினார்கள். அதற்கு ஏற்ற சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த இருவரும் கடந்த 4ஆம் தேதி இரவு, வீட்டில் மது போதையிலிருந்த லியோ பாலை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்கள். அதன்படி இருவரும் சேர்ந்து இரும்பு ராடை கொண்டு லியோ பால் தலையில் அடித்தும் கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளனர். பின்னர், அன்று இரவில் யாருக்கும் தெரியாமல் அவர்களின் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் குழிதோண்டி லியோ பால் உடலைப் புதைத்துவிட்டனர். மறுநாளே கணவனைக் காணவில்லை என்று ஸ்டெல்லா, மாமனாருக்குத் தகவல் அனுப்பி நாடகமாடினார். சகாயம், தனது மகனை கண்டுபிடித்துத் தரக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக மருமகளிடம் கூறியுள்ளார். அதைக் கேட்ட அவர் திடுக்கிட்டார். அடுத்து அந்த வாலிபரிடம் பேசி முடிவு செய்து, இருவரும் ஊரிலிருந்தால் காவல்துறையில் சிக்கிக் கொள்வோம். கொலை செய்த விஷயம் வெளியே தெரிந்துவிடும். எனவே, இன்று இரவோடு இரவாக ஊரைவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்று முடிவுசெய்து. அதன்படி, இருவரும் அன்றிரவே தலைமறைவாகிவிட்டனர்” என்று அவர் தகவல் கூறியுள்ளார். இதனடிப்படையில், மாயமான இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

இதையடுத்து பூவரசன் குப்பத்தில் உள்ள லியோ பால் வீட்டிற்குச் சென்ற போலீசார், வீட்டின் பின்புறத் தோட்டத்தில் உடல் புதைக்கப்பட்டதற்கான அடையாளம் உள்ளதா என்று ஆய்வு செய்தனர். இதையடுத்து நேற்று காலை விழுப்புரம் கோட்ட டி.எஸ்.பி. நல்லசிவம், விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு, விக்கிரவாண்டி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, தடவியல் துறையினர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் சண்முகம் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் லியோ பால் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டிப் பார்த்தனர். அந்த வாலிபரின் நண்பர் கூறியபடி, லியோ பால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தார். அவரது உடலைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "லியோ பாலை இரும்பு ராடு கொண்டு தாக்கியும் அவரது கழுத்தை அறுத்தும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை முழுமையாக வந்தபிறகே கொலை குறித்து மேலும் விபரங்கள் தெரியவரும்" என்று கூறினர்.

இந்த கொடூர கொலை சம்பவம், பூவரசன்குப்ப மக்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT