ADVERTISEMENT

மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கணவருக்கு 7 ஆண்டு சிறை!

06:38 PM Feb 02, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது மூங்கில் பாடி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி(36). இவர் அதிமுகவில் முக்கியப் பிரமுகராக உள்ளவர். இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த 28 வயது தனலட்சுமி என்பவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனலட்சுமி அதிமுகவில் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்துள்ளார். இந்த நிலையில், 2011ஆம் ஆண்டு, தனக்கும் தனது மனைவிக்கும் கள்ளக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்எல்ஏ சீட்டு கேட்டு கட்சித் தலைமைக்குப் பணம் கட்ட முடிவெடுத்துள்ளார். இதனால், தனது மனைவி தனலட்சுமியிடம் 20 லட்ச ரூபாயை அவரது பெற்றோரிடம் இருந்து வரதட்சணையாக வாங்கி வருமாறு மிரட்டிக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

அத்தோடு தேர்தல் பணிக்காக கார் வாங்கிக் கொடுக்குமாறும் அதற்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்றும் பல்வேறு முறைகளில் வரதட்சணை கேட்டு தனலட்சுமியைக் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கணவரின் கொடுமையைப் பொறுக்க முடியாத தனலட்சுமி மனவேதனை அடைந்து, கடந்த 2011 மார்ச் மாதம் 27 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து தனலட்சுமியின் சகோதரர் இளையராஜா அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரிய மூர்த்தியை கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி சாந்தி, "மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அதிமுக பிரமுகர் சூரியமூர்த்திக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை" விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் ராதிகா செந்தில் ஆஜராகி குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க சிறப்பாக வாதாடியுள்ளார். நேற்று ஒரே நாளில் மகளிர் நிறைவு நீதிமன்றத்தில் மனைவிகளைக் கொடுமைசெய்த இரண்டு வழக்குகளில் கணவன்மார்களுக்கு தண்டனை கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT