ADVERTISEMENT

கலைஞர் மீதான அவதூறு வழக்குகளை முடிப்பதற்காக அவரது இறப்பு சான்று தாக்கல்

09:25 PM Aug 27, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

மறைந்த திமுக தலைவர் கலைஞர் மீதான அவதூறு வழக்குகளை முடிப்பதற்காக அவரது இறப்பு சான்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டுள்ளது.

ADVERTISEMENT

2011-16 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அதிமுக அமைச்சர்கள், அரசு ஆகியோருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாகவும், முரசொலியில் கட்டுரை எழுதியதாகவும், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மீது 13 வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி கலைஞர் காலமானார்.

எனவே அவர் மீது தொடரப்பட்டுள்ள அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கலைஞர் தரப்பு வழக்கறிஞர் குமரேசன் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த வாரம் நீதிபதி சுபாதேவி விசாரித்தபோது கலைஞரின் இறப்பு சான்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்குகளை முடிக்க வேண்டுமென்ற கோரிக்கையில் அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மறைந்த கலைஞரின் இறப்புச் சான்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், வழக்கை முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க வழக்கறிஞர் கௌரி அசோகன் அவகாசம் கோரினார். அதை ஏற்று நீதிபதி சுபாதேவி, 4 வார கால அவகாசம் வழங்கி வழக்கை அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT