ADVERTISEMENT

கர்நாடகாவிலிருந்து திருச்சிக்கு வந்த குட்கா பொருட்கள்! மடக்கிப் பிடித்த தமிழ்நாடு போலீஸ்

11:45 AM May 08, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு டன் குட்கா பொருட்களையும் மூன்று கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரிலிருந்து சமயபுரம் பகுதிக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வருவதாக மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் (லால்குடி பொறுப்பு) சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜசேகர், முத்துசாமி, முதல் நிலை காவலர் செயலரசு, காவலர்கள் தமிழரசன், பாண்டியராஜன், பிரேம் ஆனந்த் உள்ளிட்டோர் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மூன்று கார்களை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் 35 மூட்டைகளில் ஒரு டன் எடையுள்ள ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரில் இருந்தவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சமயபுரம் அருகே புதூர் உத்தமனூர் நடுத்தெருவைச் சேர்ந்த இளையராஜா (41), தச்சங்குறிச்சியைச் சேர்ந்த மணிராஜ் (34), ராஜஸ்தான் மாநிலம் ஜோலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஹிபால் சிங் (36), கர்நாடக மாநிலம் பெங்களூர் மகடி ரோட்டைச் சேர்ந்த அமீர் சிங் (38) ஆகியோர் குட்கா பொருட்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னர் பிடிபட்ட நான்கு பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கடத்தி வரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வரப்படும் குட்கா பொருட்களை சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் இளையராஜா நடத்தி வரும் டீக்கடையில் வைத்து பல்வேறு பகுதிகளுக்கு இவர்கள் சப்ளை செய்தது தெரியவந்தது. இதில் மணிராஜ் மீது ஏற்கனவே சிறுகனூர் காவல் நிலையத்தில் குட்கா கடத்தியதாக வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT