சமீபத்தில் ‘துக்ளக்’ பத்திரிகையின் 51ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி பேசிய விஷயங்கள் சர்ச்சைக்குள்ளானது. உதாரணத்திற்கு, சசிகலா குறித்து குருமூர்த்தி பேசியது ஏற்கனவே சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், தற்போது நீதிபதிகள் நியமனம் குறித்தான அவரது கருத்து சர்ச்சைக்குள்ளானது.
அரசியல்வாதிகளின் உதவியில் எளிதில் நீதிபதிகள் ஆகிவிடுகின்றனர் என குருமூர்த்தி பேசியிருந்தார். இது அரசியல் வட்டத்திற்குள்ளும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
குருமூர்த்தியின் இந்த சர்ச்சை பேச்சு குறித்து வழக்கறிஞர் சார்ல்ஸ் அலெக்சாண்டர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18 ஜன.) முறையீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கிருபாகரன், ஆதிகேசவலு ஆகியோர் இதனை மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.