ADVERTISEMENT

தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கப்படாத கல்விச் செலவு தொகையை வழங்க அரசுக்கு உத்தரவு!

10:32 PM Jul 20, 2020 | kalaimohan

ADVERTISEMENT

2017-18 முதல் 2019-20 வரையிலான கல்வியாண்டில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, கொடுக்கப்படாமல் உள்ள கல்விச் செலவுத் தொகையை வழங்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2009-ஆம் ஆண்டு, கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு தனியார் பள்ளியிலும், 25 சதவீத இடங்களை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அந்த இடங்களுக்கான கட்டணத் தொகை, குழந்தைகளுக்கான கல்விச் செலவுத் தொகையாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலமாக தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

தமிழகத்தில், 2016-17 -ஆம் ஆண்டில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட ஒரு மாணவருக்கு, 25,000 ரூபாயை செலவுத்தொகையாக நிர்ணயித்து, தமிழக அரசு வழங்கி வந்தது.

இந்த தொகை, 2017-18 -ஆம் ஆண்டில், 11,000 ரூபாயாக குறைக்கப்பட்டது. இந்த ஆண்டுகளில், மாணவர்களின் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக்கோரியும், 2020-21 -ஆம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு 28,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 83,16,237 மாணவர்களுக்கு அரசு செலவு செய்கிறது. ஒரு மாணவருக்கு, அரசு சுமார் 32,000 ரூபாய் செலவிடும் நிலையில், தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, ரூ.11,000 என செலவு நிர்ணயித்தது தவறாகும். 2017-18 முதல் 2019-20 -ஆம் கல்வியாண்டு வரையிலான மூன்று கல்வியாண்டுகளுக்கான செலவுத்தொகையை மறு நிர்ணயம் செய்து, மீதத் தொகையை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 2017-18 முதல் 2019-20 கல்வியாண்டிற்கான கல்வி உதவித் தொகையை ஏன் இதுவரை கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, ஆறு வாரத்தில் கொடுக்கப்படாமல் உள்ள கல்வி உதவித்தொகையை கொடுக்கும்படியும், அது தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, கல்வி உதவித்தொகையை 25,000 ரூபாயிலிருந்து, 11,000 ரூபாயாக குறைத்தது தொடர்பாகவும், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT