இந்நிலையில் மாணவியர் விடுதிக் காப்பாளராக உள்ள, பாத்திமா என்பவர் மாணவிகளுக்கு வழங்கக்கூடிய மூன்று வேளை உணவுகளும் தரமற்ற முறையில் வழங்குவதாகவும், உப்பு, காரம், புளி உள்ளிட்டவைகளை கூடுதலாகப் பயன்படுத்தி, மாணவிகள் சாப்பிட முடியாத அளவில் செய்வதாகவும், மாணவிகள் தட்டிக்கேட்டால் விடுதியை விட்டு வெளியே செல்லுங்கள் என்று மிரட்டுவதாகவும், குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ச்சியாக இதே நிலை நீடித்து வந்தததால், ஆத்திரமடைந்த 20- க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று (08/03/2022) காலை 08.00 மணியில் இருந்து அரசு விடுதி முன்பு தரையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு மாணவியர் விடுதி அமைந்துள்ள பகுதி முற்றிலும் காடுகள் சூழ்ந்த பகுதி என்பதால், இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், மாணவிகள் தங்கியுள்ள அறைகளை நோக்கி கற்களைக் கொண்டு வீசுவதாகவும், அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு சம்பவ இடத்திற்கு வந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் மாணவிகளின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கூறியதால் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர்.