ADVERTISEMENT

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை; மாணவிகள் போராட்டம்

07:56 AM Mar 31, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பயிற்சியாளர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

1936 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலாஷேத்ரா நுண்கலை கல்லூரி மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கலாஷேத்ரா நுண்கலை கல்லூரியில் பணியாற்றும் மூத்த ஆசிரியர் ஒருவர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை தமிழக டிஜிபியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

'ஆசிரியரை பாதுகாக்கும் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்த சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக தனது பெயரை தவறாக பயன்படுத்தி பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என மாணவி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதனால் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தேசிய மகளிர் ஆணையம் மாற்றிக் கொண்டது.

ஆனால் ஒருவர் அல்ல, நான்கு பேர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாஷேத்ரா நுண்கலை கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி ஒருவர் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், ''ஒரு மெயின் சீனியர் ஸ்டாப். அவர் பெயர் ஹரிபத்மன். அவரை இங்கே தங்க வைத்து வீடு எல்லாம் கொடுத்து மரியாதை செலுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவருக்கு தகுதியே கிடையாது. அவர் எங்கள் பிள்ளைகளுக்கு வார்த்தைகளால் தொல்லை கொடுக்கிறார். பாலியல் தொல்லை கொடுக்கிறார். பார்க்கின்ற பார்வையே சரியில்லை. இன்னும் 3 பேர் இருக்காங்க சஞ்சிதலால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணன். சஞ்சிதலால் பசங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மிச்சம் இரண்டு பேர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள்'' என்றார்.

2008 ஆம் ஆண்டிலிருந்து இந்த கொடுமைகள் நடைபெற்று வருவதாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT