ADVERTISEMENT

''ஒரு முடிவுக்கு வாங்க''- மீண்டும் குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்

12:02 PM Oct 03, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக முன்னாள் தலைவர்கள் பற்றிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்த அது கூட்டணி முறிவு வரை சென்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

இந்த முடிவை அதிமுக தொண்டர்கள் வரவேற்றுக் கொண்டாடினர். அதேபோல பாஜக தரப்பிலும் தொண்டர்கள் வரவேற்று இருந்தனர். அதிமுக மற்றும் பாஜக தலைமைகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. இதனால் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது என்ற பேச்சும் எழுந்தது.

இருதரப்பு தலைமைகளும் கூட்டணி முறிவுக்கு பிறகு அது குறித்து வாய் திறக்காத நிலையில், அண்மையில் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, ''தொண்டர்களின் உணர்வை மதித்தே கூட்டணி முறிக்கப்பட்டது. இந்த தேர்தல் மட்டுமல்லாது 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கண்டிப்பாக கூட்டணி இருக்காது'' என தெளிவுபடுத்தி இருந்தார்.

மறுபுறம் பாஜக தலைமை கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை எங்களுக்கு வேண்டிய அறிவுறுத்தல்களை கொடுக்கும் என்றே தெரிவித்து வந்தனர். இந்த பரபரப்பு சூழல்களுக்கு மத்தியில் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றிருந்தார். இந்நிலையில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பிக்க பாஜக டெல்லி தலைமை தீவிர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும், பாஜகவின் துணைத் தலைவர் வி.பி.துரைசாமியும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காகவே பெரியவர்கள் பேசி வருவதாக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி அளித்துள்ளார். அதேபோல் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, 'அதிமுக பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று அல்லது நாளை நல்ல முடிவு வர வாய்ப்புள்ளது. தற்போதைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு விட்டால் 5 மாநில தேர்தலுக்கு பின் இந்த கூட்டணியைப் புதுப்பிக்க வாய்ப்புண்டு' என தெரிவித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக நேற்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது தற்போது அம்பலமாகியுள்ளது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணி முறிவை வரவேற்று கொண்டாடிய தொண்டர்கள் மீண்டும் குழப்பத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT