திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக மகளிர்ணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் திண்டுக்கல்லில் உலக மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக எம்.பி.கனிமொழி கலந்து கொண்டார். ஊரகத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் கீதா ஜீவன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், முன்னாள் அமைச்சர் தமிழரசி உட்பட கட்சி பொறுப்பாளர் பலர் கலந்து கொண்டனர்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, ''பெண்களுக்காக தேவையை நிறைவு செய்து திட்டம் இயற்றியவர் கலைஞர். பெண்களுக்கான சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் தலை நிமிர்ந்துள்ளனர். பெண்களின் துன்பங்களை அறிந்து கலைஞருக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் அந்த பணியை நிறைவேற்றி வருகிறார். பெண்களுக்கு மகளிர் உரிமைதொகை என திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார்''என்றார்.
அதைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ''மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசின் ஸ்டிக்கர்களை ஒட்டி வருகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது. 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியாக மாநில அரசிடம் பெற்று சில பைசாக்களை மட்டும் மக்கள் நலத்திட்ட உதவித்தொகையாக தருகிறது. பாஜக அரசு ஊழலை பற்றியும் ஸ்டிக்கர் ஒட்டுவதைப் பற்றியும் பேசவே அருகதை அற்றவர்கள்'' என்றார்.