ADVERTISEMENT

போலிஸ் துணையோடு திருச்சியில் கஞ்சா- கமிஷனரிடம் புகார் செய்த பொதுமக்கள்!

07:06 PM Jun 26, 2019 | kalaimohan

போதை தடுப்பு நாளான இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் அலுவலகத்தில் சுமார் 100 மேற்பட்ட பெண்கள் எங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை போலிஸ் துணையோடு நடைபெறுகிறது. கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது குண்டாஸ் வழக்கு போட வேண்டும் என்கிற கோரிக்கையோடு திரண்டு வந்தனர்.

அவர்களின் என்ன பிரச்சனை என்று கேட்ட போது...

நாங்கள் திருச்சி மாநகரில் காஜாபேட்டை பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் ,இளைஞர்களும் உள்ளனர். எங்கள் பகுதியில் பலவருடங்களாக அம்மாசி, கொளஞ்சி, அப்புக்குட்டி என்கிற மலர்கொடி அவரது கணவர் ராமச்சந்திரன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT


இவர்கள் விற்பனை செய்வதால் இந்த பகுதியில் உள்ள இளைஞர்களும், பெண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து காஜாப்பேட்டைக்கு கஞ்சா வாங்க வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இப்பகுதியில் உள்ள பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதும், கிண்டல் செய்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இரவு 12 மணி வரையிலும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கடந்த வாரம் இரவில் தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் காலில் இருந்த ஒரு கொலுசைக் கழற்றி எடுக்க முயற்சி செய்தது பெரிய பிரச்சனையானது. இதனைக்கண்ட அப்பகுதி இளைஞர்கள் சத்தம் போட்டது அவன் தப்பி ஓடினான்.

ADVERTISEMENT


இதேபோன்று இன்னொரு நாள் பெண்களிடம் இருந்து செல்போன் பறித்து சென்ற சம்பவமும் நடந்தது. கஞ்சா வாங்க வருபவர்கள் வீடு தெரியாமல் அக்கம்பக்கத்தினர் வீடுகளை தட்டுவதும், போதையில் ஆபாசமாக பேசுவதும் நாளுக்கு நாள் இவர்கள் அராஜகம் அதிகரித்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள நாங்கள் எல்லொரும் சேர்ந்து கஞ்சா விற்க வேண்டாம் என்று அம்மாசி பாப்புகுட்டி ஆகியோரிடம் முறையிட்டபோது, அவர்கள் நாங்கள் அப்படித்தான் விற்பனை செய்வோம் உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று அடாவடிதனமாகவும், ஆபாசமாக திட்டி எங்களின் மீறி எதுவும் செய்ய முடியாது கொன்று புதைத்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.

இவர்களுக்கு எதிராக பேச மக்கள் பயப்படுகிறார்கள். காவல்துறையிடம் பலமுறை இந்த பிரச்சனையை குறித்து புகார் சொல்லியும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்வது போன்ற வீடியோக்களை ஆதாரமாகக் கொண்டு வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்கிறார்கள். நாங்கள் புகார் சொன்னதற்காக பெரிய அளவில் வழக்குகளை எண்ணிக்கைக்காக மட்டுமே கைது செய்கின்றனர். பிறகு மீண்டும் வெளியே வந்து கஞ்சா விற்பனையை தொடங்கிவிடுகின்றனர்.


போலீசார் தொடர்ந்து இவர்களிடம் லஞ்சம் பெற்று செல்கிறார்கள் என்பதால் தொடர்ந்து விற்பனை செய்கிறார்கள். இந்தநிலையில் 24.6.19 அன்று இரவு நேரத்தில் அந்த பகுதியில் இளைஞர்கள் கஞ்சா விற்பனைக்கு எதிராக பாப்புகுட்டி என்கிற மலர்கொடியிடம் இடம் பேசியுள்ளனார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பாப்புகுட்டி என்கிற மலர்கொடி, அம்மாசி, பாப்புகுட்டி கணவர் ஆகியோர் அந்தப் பகுதியில் இளைஞர்களை கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர். தகாத வார்த்தையில் திட்டி அசிங்கபடுத்திய ஒரு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் விக்னேஷ் ராஜா என்கிற கார்த்திக் தலையில் காயம் ஏற்பட்டது தையல் போடப்பட்டுள்ளது. மேலும் பிரச்சனையை தடுக்க வந்த போலீசார் என்ன நடந்தது என்று கூட விசாரிக்காமல் அம்மாசி குடும்பத்தை தவிர்த்து அங்கிருந்த அனைவரின் மீதும் பெண்கள் இளைஞர்கள் என்று பாராமல் கண்மூடித்தனமாக லத்தியால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

பாலக்கரை காவல்நிலையத்தை பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் மருத்துவமனைக்கு சென்று வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டு நடந்த சம்பவங்களை முழுதாக மறைத்து பொய்யாக தனக்கு சாதகமாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


பாலக்கரை காவல் ஆய்வாளர் அரோக்கியதாஸ் மீது பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் நீதிமன்றத்தில் தனி புகார் கொடுத்து அதற்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு பழிதீர்க்கும் நடவடிக்கையாக கஞ்சா விற்கும் கும்பலோடு இணைந்து கொண்டு அவர்களிடம் நடந்த சம்பவத்திற்கு மாறாக பொய் புகார் எழுதி வாங்கி வழக்கறிஞர் முருகானந்தன் மீதும் அந்த பகுதி இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.

கஞ்சா விற்பனை செய்யும் பகுதி என்ற பெயர் எங்களுக்கு வேண்டாம் இனி பொறுக்க முடியாது. பொதுமக்கள் அனைவரும் இணைந்து இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கருதுகிறோம். பலவருடங்களாக நடந்துவரும் கஞ்சா விற்பனையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும் கஞ்சா விற்பனை மற்றும் ரவுடி தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் பாலக்கரை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் கொடுக்க வந்துள்ளோம் என்றார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT