தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி. இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகிலுள்ள எடையார் கிராமம். இவர் விழுப்புரம் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இவரது மூத்த மகன் டாக்டர் பொன் கௌதம சிகாமணி.
இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்றவர். இவர் கடந்த 2008ஆம் ஆண்டில் இந்தோனேஷியா நாட்டின் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள ‘பிடி எக்சல் மெகிண்டோ’ என்ற நிறுவனத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் 41.57 லட்சம் ரூபாய்க்கு 2.45 பங்குகளை மேற்படி கம்பெனியில் முதலீடு செய்து வாங்கியுள்ளார். என்றும் அதேபோல் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள நிறுவனம் ஒன்றில் 55,000 அமெரிக்க டாலருக்கு அப்போதைய இந்திய மதிப்பில் 21.86. லட்சம் ரூபாய்க்கு முதலீடு செய்துள்ளதாகவும் இதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் பொன் கௌதம சிகாமணி என்றும் இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி வந்தனர்.
இதன்மூலம் அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின்கீழ் தமிழகத்தில் கௌதம சிகாமணிக்கு சொந்தமான விவசாய நிலம் வணிக வளாகம் உட்பட ரூ.8.60 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத் துறையினர் நேற்று முடக்கம் செய்துள்ளனர். இந்த முறைகேடு நடந்தபோது பொன்முடி, உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்துள்ளார் என்று அமலாக்கத் துறை தெரிவிக்கின்றது. மேலும் வெளிநாடுகளில் முதலீடு செய்யுமளவிற்கு இவ்வளவு பணம் பொன் கௌதம சிகாமணிக்கு எப்படி வந்தது என்பது குறித்து கௌதம சிகாமணி எம்.பி.யிடம் விசாரிக்கவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் தி.மு.க. அமைச்சர் தற்போது கட்சியில் தலைமை பொறுப்பில் உள்ளவர் பொன்முடி, அவரது மகன் டாக்டர் பொன் கௌதம சிகாமணி தற்போது எம்.பி.யாக உள்ள நிலையில் அமலாக்கத்துறை அவரின் சொத்துக்களை முடக்கம் செய்துள்ளது. இது விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.