ADVERTISEMENT

நீதிமன்றம் வெளியே போலீஸ் சட்டையை பிடித்த பெண் 

03:49 PM Jan 06, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தனக்கு நடந்த கொடுமைகளை நீதிபதியிடம் கூற வேண்டும் என்பதற்காக கோர்ட்டுக்கு வந்த பெண்ணுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதல் சம்பவம் தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மாதுளம்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தாமரை. 41 வயதான இவர், தன் சிறுவயது முதல் வறுமையில் வாடி வந்துள்ளார். அதன்பிறகு பிழைப்புக்காக வெளிநாடு சென்ற செந்தாமரை அங்கு சிறு சிறு வேலைகளைச் செய்து கடுமையாக உழைத்து பணம் சம்பாதித்துள்ளார். மேலும், அந்தப் பணத்தை தன்னுடைய உறவினர்களிடம் எந்தவித ஆவணங்களுமின்றி நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய ஊருக்குத் திரும்பிய செந்தாமரை தான் கொடுத்த பணத்தை உறவினர்களிடம் கேட்டபோது, அவர்களோ செந்தாமரையை ஏமாற்றும் எண்ணத்தோடு வாங்கிய பணத்தை கொடுக்காமல் சாக்கு சொல்லி வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தாமரை கும்பகோணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் காவல்துறை தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிபதியிடம் தனக்கு நடந்த துரோகத்தைக் கூற முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவலர்கள் அந்த பெண்மணியைத் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செந்தாமரை தன்னை தடுப்பவர்களை எல்லாம் முரண்டு பிடித்து தள்ளிவிட்டார். மேலும், செந்தாமரையைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இவை அனைத்தையும் நீதிமன்ற வளாகத்தில் இருந்த ஏராளமான பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்த பிரச்சனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பானது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அப்பெண்ணை சமாதானம் செய்ய முற்பட்ட போது தொடர்ந்து பிடிவாதமாக நீதிபதியைப் பார்க்க வேண்டும் என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டே பெண் போலீசார் மீதும் தனது ஆவேசத்தைக் காட்டினார். போலீசாரின் ஆடைகளையும் பிடித்து இழுத்து அவர்களின் ஆடையைக் களைய முயன்றார். அங்கிருந்த ஒருவர் அமைதியாக போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்ட போதும் அவர் பிடிவாதமாகவே இருந்தார். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட செந்தாமரையை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சுற்றியிருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT