ADVERTISEMENT

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன கொடியேற்றம்; பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

10:06 PM Jan 24, 2024 | kalaimohan


கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த, வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகள் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா விமரிசையாக நடைபெறும். அதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானோர் வடலூருக்குத் திரண்டு வருவர்.

ADVERTISEMENT

நிகழாண்டு 153-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா இன்று (ஜன.24) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. காலை 8 மணியளவில் தரும சாலை அருகே சன்மார்க்கக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மருதூரில் வள்ளலார் பிறந்த இல்லம், தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் சன்மார்க்க கொடியேற்றம் நடைபெற்றது. பார்வதிபுரம் பொதுமக்கள், வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட பல்லக்கை சுமந்து, பலவகைப் பழங்கள், சீர்வரிசைப் பொருட்களுடன் ஊர்வலமாக சத்திய ஞான சபை கொடிமரத்தின் அருகே வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள், "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' என்ற வள்ளலாரின் பாடலைப் பாடினர்.

ADVERTISEMENT

பின்னர், வள்ளலாரின் கொடி பாடல்களைப் பாடியபடி சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து, அந்தப் பல்லக்கு சத்திய ஞான சபையை வலம் வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா நாளை (ஜன.25) நடைபெறுகிறது. முதல் தரிசனம் காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை மறுநாள் (ஜன.26) காலை 5.30 மணிக்கு என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். விழாவைக் காணவரும் சன்மார்க்க அன்பர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை. மாவட்ட நிர்வாகம் மற்றும் தெய்வ நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளனர். சத்திய ஞான சபை வளாகப்பகுதியில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெற்றது. போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT