தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்களில் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நடந்து முடிந்தது. தோராயமாக 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி உட்பட மூன்று ஒன்றியங்களில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றன. அதிமுகவின் சட்டமன்ற துணை கொறடாவான அதிமுகவைச் சேர்ந்த அரக்கோணம் தொகுதி எம்எல்ஏ ரவி, நெமிலி ஒன்றியத்திலுள்ள தனது கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தனது வாக்குகளைச் செலுத்தினார். வாக்களித்துவிட்டு அந்த அறையிலிருந்த பத்திரிகை, தொலைக்காட்சி கேமராக்களுக்கு போட்டோ, வீடியோ எடுக்க போஸ் கொடுக்கும் பொழுது அவர் காட்டிய விரல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் அனைவரும் ஓட்டு போட்டு முடித்தபின் ஆள்காட்டி விரலையே காட்டுவார்கள். காரணம் அந்த விரல் நகத்தில்தான் ஓட்டு போட்டார் என்பதை உறுதி செய்ய 'மை' வைப்பார்கள்.
அரக்கோணம் எம்எல்ஏ ரவியோ நடுவிரலைக் காட்டினார். அதற்கு அர்த்தம் வேறு. இப்படி கொச்சையாகக் காட்டியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. ஆனால் அப்படி நடுவிரல் காட்டியதை மாற்றிக்கொள்ளவில்லை.
யாருக்காக இப்படிக் காட்டினார்? தன் கட்சியினருக்கா? அதிமுகவுக்கு ஓட்டுப்போட்ட பொதுமக்களுக்கா?, எதிர்க்கட்சிகளுக்கா?, வேட்பாளர்களுக்கா என ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவாதம் ஏற்பட்டுள்ளது.