Skip to main content

மீண்டும் சீட் கிடைக்க கோயிலில் யாகம் நடத்திய அதிமுக எம்.எல்.ஏ..!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

AIADMK MLA Chinnathambi who made pooja in the temple to get seats again ..!

 

ஆத்தூர் அருகே, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., தேர்தலில் மீண்டும் சீட் கிடைக்கக் கோரி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சின்னத்தம்பி. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான இவருக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல்கள் உலா வருகின்றன.

 

இந்நிலையில் அவர், ஆத்தூர் கோட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயிலில், மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்க வேண்டி, செவ்வாய்க்கிழமை (பிப். 16) இரவு சிறப்பு யாகம் நடத்தினார். இந்தக் கோயிலில், அமாவாசை முடிந்து 5ம் நாள் வளர்பிறை திதியில் பக்தர்கள் யாகம் நடத்துவது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 

 

புதிய சொத்துகள் வாங்குதல், இழந்த பதவியை மீண்டும் பெறுதல், பல ஆண்டாக இழுத்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளில் தீர்வு காணுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இந்தக் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தினால் நல்லபடியாக கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் செல்லியம்மன் கோயிலில் அரசியல்வாதிகள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வேண்டிக்கொண்டு யாகம் நடத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில்தான் சின்னதம்பி, பிப். 16ம் தேதி, கோயிலில் சிறப்பு யாகம் நடத்தினார். மீண்டும் கட்சியில் சீட் கிடைத்து, எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து யாகமும், சிறப்பு பூஜைகளும் அவர் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. 

 

இந்தச் சம்பவம் அதிமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.