ADVERTISEMENT

அலுவலகத்தினுள் புகுந்து பைனான்சியர் கொலை; நள்ளிரவில் உறவினர்கள் போராட்டம்

11:10 AM Aug 18, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேளாங்கண்ணியில் முன்விரோதம் காரணமாக பிரபல பைனான்சியர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச்சென்ற குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்குபொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர். டி.வி.ஆர் மனோகர் என்று அழைக்கப்படும் இவர், அப்பகுதியில் பைனான்சியராகவும், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றும் நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு சிலருக்கும் தொழில்ரீதியாக முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் டி.வி.ஆர் மனோகர், வேளாங்கண்ணி முச்சந்தி அருகே உள்ள அவருக்குச் சொந்தமான அலுவலகத்தில் அவரது நண்பர் மணிவேலுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் கடையின் உள்ளே புகுந்து அங்கிருந்த டி.வி.ஆர். மனோகரை, கொண்டுவந்த கொடூர ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த மணிவேல் தடுக்க முயன்றபோது அவரது கையையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் டி.வி.ஆர் மனோகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்தப் படுகொலை சம்பவத்தை அறிந்து நாகை எஸ்.பி. ஜவகர் விரைந்துவந்து நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும் பைனான்சியரை படுகொலை செய்து விட்டு சாவகாசமாக தப்பிச் சென்ற குற்றவாளிகளை அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட பைனான்சியர் டி.வி.ஆர் மனோகரின் உடல் நாகை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மணிவேல் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


பைனான்சியரை படுகொலைசெய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் தெற்குபொய்கைநல்லூர் கிராம மக்கள் நள்ளிரவில் நாகை அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.


வேளாங்கண்ணியில் பிரபல பைனான்சியரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றம் கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT