ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியைச் சரி செய்ய பத்திரப்பதிவு அலுவகங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மிக அவசியம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஊரடங்கு நேரத்தில் செயல்பட்டால் கரோனோ தொற்று பரவ வாய்ப்புள்ளது என, பத்திரப்பதிவு எழுத்தாளர் சங்கம் மனு அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அரசு தரப்பு, ஊரடங்கு காரணமாக அரசுக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது என்றும் இதைச் சரி செய்வதற்கும், அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் கடன் பெற நிறுவனங்கள் பதிவு செய்வதற்கும், பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுவது அவசியமானது. தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியுள்ள விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, குறிப்பிட்ட அளவு நபர்களை மட்டுமே அனுமதித்து பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் பத்திரப்பதிவு துறை செயல்ப்படுவதில் ஏதேனும் புகார்கள் இருந்தால், அதைப் பத்திரப்பதிவு குறைதீர் மையத்திற்கு அளித்தால், அதை உடனடியாகச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்தது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.