ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு என்ற மாநாட்டைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (22/09/2021) தொடங்கி வைக்கிறார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (22/09/2021) காலை 10.45 மணிக்கு முதலமைச்சர் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி கையேட்டையும் வெளியிடுகிறார்.
ஃபிளிப்கார்ட் நிறுவனம் மூலம் 2,000 பேருக்கு பயிற்சியளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. ரூபாய் 240 கோடி மதிப்பில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்களின் கண்காட்சியும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழ்நாடு அரசின் தொழில்துறையின் முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.