2010ன் போது ஜெ. அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பிலிருந்தவர் நெல்லை மாவட்டத்தின் அம்பை தொகுதி எம்.எல்.ஏ.வான இசக்கிசுப்பையா. அமைச்சரான பின்பு அவரது செயல்பாடுகளில் பிரச்சனைக்குரியதை அப்போது நக்கீரன் கட்டுரையாக வெளியிட்டதால் அவரது பதவியை ’ஜெ’ பறித்தார். குறுதிய காலத்தில் அமைச்சர் பதவியை இழந்தவர்.
ஜெ. மறைவிற்குப் பின்பு டி.டி.வி. அ.ம.மு.க. ஆரம்பித்த பிறகு அவரது தென் மாவட்ட விசிட்டின் போது சமூகம் சார்ந்த வகையில் தேவர் சமூகத்தவர்கள் அவர் பின்னால் திரண்டனர். இதனால் அவருக்கும் அவரது கட்சிக்கும் பெரிய பில்டப் கொடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாவார் தினரகன் என்ற பிம்பம் உருவானது. இதனடிப்டையிலேயே மாஜி அமைச்சர் இசக்கிசுப்பையா அவர் பின்னால் நின்றார். கட்சிக்காக கணிசமான தன் கரன்சியை இழந்த ரிசார்ட்களின் ஒனர் இசக்கிசுப்பையா.
ஆனாலும் அணி மாறிய மா.செ.களின் இடத்திற்கு வி.கே.புதூர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களின் பெயரை, தென் மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜாவிடம் கொடுத்த இசக்கிசுப்பையா, அவர்களை நியமிக்கும்படி சொல்ல, மாணிக்கராஜாவோ வேறு நபர்களைச் சிபாரிசு செய்திருக்கிறார். இதை அறிந்த இசக்கிசுப்பையாவும் டி.வி.யைச் சந்தித்து தனது ஆதரவாளர்கள் பட்டியலைத் தர, அவரும், மாணிக்கராஜாவின் சிபாரிசையே ஏற்றுக் கொண்டதைத் தெரிவிக்க, அப்செட் ஆகியிருக்கிறார் இசக்கிசுப்பையா.
இப்படி ஒரு மோட்டிவ் உருவான நிலையில், தான், இனியும் நீடிப்பது வேஸ்ட். தான், யார்?. என்பதை தினகரனுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்திலிருந்த இசக்கிசுப்பையா நடந்தவைகளை அசை போட்டவர் கொதிப்பின் உச்சிக்கே போய்விட்டார்.
இந்தச் சூழலில் அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கும் போது இசக்கிசுப்பையா மட்டும், இலைப் பக்கம் திரும்பாததைக் கட்சித் தலைமை கண்வைத்திருக்கிறது. அதே சமயம், தமிழக அளவில் பெரிய லெவலில் காண்ட்ராக்ட்களை செய்து வரும் பிக்க்ஷாட் இசக்கிசுப்பையாவின் காண்ட்ராக்ட் பணிகள் முடிக்கப்பட்டு சுமார் 50’சி’ வரையிலான பில்கள் பாஸாகாமல் முடக்கப்பட்டிருப்பது திசை மாறி அடித்த அரசியல் க்ளைமேட் என்பதை உணர்ந்த இசக்கிசுப்பையாவுக்கு இலைத்தரப்பால் கடுமையான பணமுடை. நெருக்கடிக்கும் பிரஷ்ஷருக்கும் ஆளானார் தனக்கிருக்கும் அ.தி.மு.க. நண்பர்கள் மூலமாக பேசிப் பார்த்திருக்கிறார். ஏன் அங்கிருக்க வேண்டும். இங்கே வந்து விடுங்கள் எல்லாம் நலமாகும் என சிக்னல் கிடைத்ததை யடுத்தே தொழில், பொருட்டு அ.தி.மு.க.வில் இணையும் முடிவுக்கு வந்திருக்கிறார். இசக்கிசுப்பையா.
இதற்காக மேற்கு மாவட்டப் பகுதிகளில் ஊர் ஊராகச் சென்று தனது ஆதரவாளர்களை திருப்பி வருகிறார். அணி மாறும் இந்த நிகழ்ச்சிக்கு இ.பி.எஸ்.சையும் ஒ.பி.எஸ்.சையும் வரவழைத்து தன்னுடைய மண்டபத்தில் தன்னுடைய செலவிலேயே பெரிய அளவில் வரும் 06ம் தேதியன்று நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார் இசக்கிசுப்பையா.
இங்கே கொட்டினால், அங்கே வலி எடுக்கும் என்பது தானே உலக நியதி!.