ADVERTISEMENT

பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய ஈரோடு சங்கம்!

08:24 PM Jan 13, 2021 | kalaimohan

ADVERTISEMENT

தை ஒன்று தமிழர் திருநாள் தைப்பொங்கல்... தமிழர்களின் பாரம்பரிய விழாவாக தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு மனிதகுலத்திற்கு ஆபத்தாக பரவிய கரோனா வைரஸ் தொற்றும், அதனால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கமும் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இப்போது வரை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற தமிழர்களின் கூற்றுப்படி, இந்த தை பொங்கல் திருவிழா மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடி இருப்பினும் தை பொங்கலுக்காக தங்கள் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப புத்தாடைகள், பொங்கல் பொருட்கள், கரும்பு என தேவையான பொருட்களை வாங்கி உற்சாகத்துடன் தை பொங்கலை வரவேற்கிறார்கள் மக்கள். இதில் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் பத்திரிகையாளர் குடும்பத்திற்காக ஒரு சிறப்பான செயலை செய்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள சில நல்ல மனிதர்களின் உதவியோடு, ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நல சங்க உறுப்பினர்கள் குடும்பத்திற்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 13.1.2021 புதன்கிழமை காலை 12 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ஜீவாதங்கவேல், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை ஈரோடு நகர காவல்துறை துணை கண்கானிப்பாளர் ராஜீ மற்றும் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினார்கள்.

மாவட்டம் முழுவதும் இச்சங்கத்தில் உறுப்பினராக உள்ள 160 பேர்களுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் வேட்டி, சட்டை, சேலை, பொங்கல் வைக்க தேவையான பொருட்கள், சில உணவு பொருட்கள் என ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மதிப்பில் 25 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது.

"ஏற்கனவே கரோனா காலகட்டத்தில் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூபாய் தலா இரண்டாயிரம், ஒரு சிப்பம் அரிசி, மளிகை பொருட்கள் என மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வழங்கி ஒரு முன்னோடியாக பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு நம்பிக்கையை கொடுத்தது ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம். அதேபோல் தற்போது தை பொங்கலை குடும்பத்தோடு மகிழ்வுடன் கொண்டாட பொங்கல் பொருட்கள் வழங்கி சிறப்பான சேவையும், பிற மாவட்ட பத்திரிகையாளர் சங்கங்களுக்கு வழிகாட்டுதலாகவும் இச்சங்கத்தின் செயல்பாடு அமைந்துள்ளது. 'மகிழ்வித்து மகிழ்' என்பதற்கு நீங்களே உதாரணம் என காவல்துறை அதிகாரிகள் பாராட்டினார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தி பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்குவது வழக்கம் அது போலவே இவ்வருடம் நடந்தது என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் சங்க துணை தலைவர்கள் சுப்பிரமணியம், மூர்த்தி, துணைசெயலாளர்கள் ஜோசப்இன்பராஜா, நவீன் மற்றும் நிர்வாகிகளோடு ஈரோடு, பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், பெருந்துறை, சென்னிமலை, கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அரச்சலூர் என மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT