இந்த முறை தேர்தல் பணிக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டது எல்லாமே ஆன்லைன் தேர்வால்தான். ஆன்லைனில் தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைனில் தேர்தல் பணிக்கானவர்கள் தேர்வு செய்யப்பட்டதால், தேர்தல் பணியில் விருப்பம் இல்லாதவர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் இல்லாதவர்கள் உட்பட அனைவரையும் உறுதிப்படுத்தும் பணி இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கிறது.
இத்தேர்தலில் முதற்கட்ட தேர்தல் பணியில், 4,645 அலுவலர்களும், இரண்டாம் கட்ட தேர்தல் பணியில், 6,934 அலுவலர்களும் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு கடந்த, 15 மற்றும், 21ந் தேதிகளில் இரண்டு கட்ட பயிற்சி நடந்தது. இதில் பத்து சதவீதத்துக்கு மேற்பட்ட பணியாளர்கள், அந்த பயிற்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதுபற்றி, தேர்தல் நடத்தும் பிரிவு அலுவலர்கள் நம்மிடம் கூறும் போது,
கடந்த உள்ளாட்சி தேர்தலில், ‘மேனுவலாக’ அதாவது நாங்களே, தேர்தல் பணியாளர்களுக்கு பணி அமர்த்தும் பணியை செய்தோம். தேர்தல் பணிக்கு அதிகமாக ஆண் பணியாளர்களும், பிறதுறையினரும் வர விரும்புகின்றனர். பெண் பணியாளர்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருப்பதால், அவர்கள் தவிர்க்க முயன்றும் விருப்பம் தெரிவிப்பதில்லை.
நாங்களும் பணி பட்டியலில், விருப்பம் தெரிவித்தவர்களை நியமித்துவிட்டு, பெண் பணியாளர்களை குறைந்த பட்ச துாரத்தில் நியமிப்போம். தற்போது எல்லாமே ஆன்லைனில் நியமனம் நடந்ததால், விருப்பம் இல்லாதவர்களுக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் பயிற்சி நடந்த நாளில் தேசிய திறனாய்வு தேர்வு பணியும், அரையாண்டு தேர்வுக்கான பயிற்சியும், சில ஆசிரியர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியும் அந்த தேதியில் நடந்தது.
இதனால், முதல் மற்றும் இரண்டாம் தேர்தல் பயிற்சியை அவர்கள் வராமல் புறக்கணித்தனர். அவர்களது மொபைல் எண்ணை தொடர்பு கொண்டால், பலரது போன் ‘சுவிட்ச் ஆப்’ ல் உள்ளது. அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது.
குறிப்பாக, ‘பி.ஓ.2’ எனப்படும் ‘விரலில் மை வைக்கும் பணியாளர்’, ‘பி.ஓ.6’ எனப்படும், ‘ஓட்டுச்சீட்டில் அம்புக்குறி, முத்திரை இடுதல், ஓட்டுச்சீட்டை மடித்து கொடுத்தல் பணி செய்வோர்’ அதிகமாக பயிற்சிக்கு வரவில்லை. ஆனால் ஆன்லைனில் அவர்களுக்கு பணி இடம் வழங்கப்பட்டுள்ளதால் அப்படி பயிற்சி
பணிக்கு வராதவர்களுக்கு, அவரவர் துறை மூலம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தவிர, ‘தேர்தல் பணிக்கு கட்டாயம் வர வேண்டும்’ என்ற உத்தரவும் அப்பணியாளர்கள் சார்ந்த கல்வித்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி துறை மூலம் கடிதம் அனுப்பி உள்ளோம்.
கடிதம் பெற்றவர்களில் பலர், ‘தங்களுக்கு உடல் நிலை சரி இல்லை’ எனக்கூறி, டாக்டர் சான்றும் வழங்கி உள்ளனர். தற்போது அரையாண்டு தேர்வாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்க்காமல், வெளியூருக்கு குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு பதிவு செய்த பல பணியாளர்கள், தங்களது டிக்கெட் விபரத்துடன், கேட்கின்றனர். இன்னும் சிலரிடம் இருந்து, பதிலே வரவில்லை.
இதுபற்றி, மாவட்ட தேர்தல் அதிகாரி, பார்வையாளரிடம் பேசி, உபரியாக உள்ளவர்களுக்கு பணி ஆணை வழங்குகிறோம். அதேநேரம், தேர்தல் பணிக்கு வராதவர்கள் பட்டியலுக்கு நோட்டீஸ் அனுப்பி, துறை ரீதியாகவும், தேர்தல் ஆணையம் மூலமும் நடவடிக்கை முயல்கிறோம்.
ஆனாலும் இந்த ஆன்லைன் குளறுபடியால் நூற்றுக்கனக்கான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு விரலில் மை வைக்கும் ஊழியர்கள் வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது." என்றார். இதே நிலைதான் மாநிலம் முழுக்க உள்ளது.