ADVERTISEMENT

நக்கீரனுக்கு நன்றி சொல்லும் முதியோர், விதவை பெண்கள், மாற்றுத்திறனாளிகள்  

11:16 AM Mar 13, 2020 | kalaimohan

"முதியோர் வாழ்க்கை முதல்வரின் பார்வைக்கு" என்ற தலைப்பில் 31.10.2007ல் நக்கீரன் இதழில் ஆண் வாரிசு இருந்தும் பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதுமையிலும் வறுமையிலும் வாடிய பெற்றோர்களின் அவல நிலைமையை வெளிப்படுத்தினோம். அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் நமது நக்கீரன் செய்தியை படித்துவிட்டு இரண்டே நாட்களில் ஆண் வாரிசு இருந்தாலும் கூட வறுமையில் வாடும் முதியோர்களுக்கு மாதம் 400 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து உத்தரவிட்டார். அதற்கு முன்பு ஆண்வாரிசு இல்லாமல் 65வயது கடந்த முதியோர்கள் மற்றும் விதவைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நக்கீரன் செய்தியினால் விரிவடைந்தது. இதன் மூலம் 2015 வரை தமிழக அளவில் 30 லட்சத்து 35 ஆயிரம் பேர் பயன்பெற்று வந்தனர். அதையடுத்து வந்த அதிமுக அரசு 5 லட்சத்து 81 ஆயிரம் பேர்களை தகுதி நீக்கம் செய்ததோடு புதிய பயனாளிகளுக்கான அனுமதி உத்தரவும் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 2019 வரை சுமார் 1 கோடி பேர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருந்த நிலையில் 2019 இறுதியில் முதல்வர் எடப்பாடி அவர்கள் 5 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என உத்தரவிட்டார். யானைப்பசிக்கு சோளப்பொறியாக அமைந்தது முதல்வர் உத்தரவு.

ADVERTISEMENT

>

ADVERTISEMENT


இதுவொரு பக்கம் என்றால் 2007ல் நக்கீரன் இதழில் செய்திவெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அப்போதுமுதல் இப்போது வரை நம்மைத் தேடிவந்து முறையிட்ட தொளார், புத்தேரி, செங்கமேடு, கொட்டாரம் அண்ணாநகர், பெ.பூவனூர், கொடிக்களம், கூடலூர், காஞ்சிராங்குளம், திட்டக்குடி, ஆலத்தூர், உட்பட பலஊர்களை சேர்ந்த முதியோர்,விதவை,மாற்றுத்திறனாளிகள் என சுமார் 200க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு நக்கீரன் மூலம் உதவித்தொகை கிடைக்க திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் மூலம் உதவிசெய்துள்ளோம். சமூக நல வட்டாட்சியர்களாக ஏற்கனவே பணியில் இருந்த தணிகாச்சலம், ராஜா, கண்ணன், போன்றவர்கள் மூலமும் தற்போது சிறப்பாக பணி செய்துவரும் சமூக நல வட்டாட்சியர் ரவிச்சந்திரன் அவர்கள் பெரிய அளவில் அக்கறை எடுத்துக்கொண்டு நமது வேண்டுகோளுக்கிணங்க தகுதிவாய்ந்த 50 க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அரசு உதவிகள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேருவதற்கு எந்தவித சிபாரிசுகள் இடைத்தரகர்களின் தலையீடுகள் இல்லாமல் பயனாளிகள் பயனடைந்து வருகிறார்கள். அரசு அளிக்கும் உதவியோடு மட்டுமல்லாமல் தன்னார்வலர்கள் மூலம் உதவிப்பெற்று மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிசெய்துவருகிறார். அதற்கு உதாரணம் கடந்த 19 ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம், சமூக நல வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


அதில் மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு 30 ஆயிரம் மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டன. இதை சமூக ஆர்வலர்கள் மூலம் அன்பளிப்பாக பெற்று சார் ஆட்சியர் கைகளால் பயனாளிகளுக்கு வழங்கச்செய்தார் வட்டாட்சியர் ரவிச்சந்திரன். சார் ஆட்சியர் பிரவீன் ரவிச்சந்திரனை பாராட்டினார். இதில் புத்தேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் 25 வயது விக்னேஷ் இருகால்களும் செயல்படாத நிலையில் உள்ள இவர் நீண்ட காலமாக மூன்று சக்கர சைக்கிள் பெறுவதற்கு முயற்சி செய்தும் கிடைக்காததால் அவர் நம்மை தொடர்புகொண்டு வேண்டுகோள் வைத்தார். இதை நாம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அதையடுத்து அந்த மூன்று பேரில் விக்னேஷிற்கும் மூன்று சக்கர சைக்கிள் கிடைக்கச் செய்தார் ரவிச்சந்திரன்.


ரவிச்சந்திரன் அவர்களிடம் கேட்டபோது, நான் இங்கு பணியேற்ற பிறகு 550 தகுதியுள்ள புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது முதல்வர் அறிவித்த 5 லட்சம் பேரில் திட்டக்குடி தாலுக்காவில் மட்டும் 1050 பேருக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போது வரை இந்த தாலுக்காவில் மட்டும் 23000 பயனாளிகள் பயன்பெற்றுவருகிறார்கள். முதியோர்கள், விதவைகள், மாற்றுதிறனாளிகள் போன்றவர்கள் எங்களிடம் மனுகொடுத்த பிறகு அலுவலகத்திற்கு அலையவிடுவதில்லை. தகுதியுள்ள பயனாளிகளை தேர்வு செய்து அரசு ஒதுக்கும் நிதியை அவர்களுக்கு முறையாக கிடைக்கச் செய்கிறோம் ஆதரவற்ற இம்மக்களுக்கு அரசின் அனுமதியோடும் மனநிறைவோடும் பணிசெய்துவருகிறோம் என்கிறார் வட்டாட்சியர் ரவிச்சந்திரன்.

நக்கீரன் மூலம் பயன்பெற்ற பயனாளிகளில் ஒரு பகுதியினரை நேரில் சந்தித்தோம். அவர்கள் கண்ணீர்மல்க நமக்கும், நக்கீரனுக்கும் நன்றி கூறி வாழ்த்தினார்கள். ஒரு செய்தியை எழுதி வெளியிடுவதன் மூலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகிடைக்கும் அப்படி அதிகாரிகளால் தீர்த்துவைக்கப்பட்ட காலம் மாறி வருவதால் மக்கள் பிரச்சனைதீர போராடிவருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, கிராமங்களில் ஆதரவற்ற முதியோர்கள், விதவைப் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் யாரும் உதவியும் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நக்கீரன் நேரடியாக களமிறங்கி உதவிசெய்தது. இதுபோன்று கிராமங்களில் உள்ள நல்ல மனம்படைத்த இளைஞர்கள் அப்படிப்பட்டவர்களுக்கு களமிறங்கி உதவிசெய்யவேண்டும். நம்மிடம் பேசிய முதியோர்கள் பலர் பிள்ளைகள் இருந்தும், பிள்ளைகள் இல்லாமலும் மிகவும் சிரமப்படுகிறோம் என்றனர். அரசு வழங்கும் உதவியை பெறுவதற்கு நம்பிக்கையானவர்கள் உதவ முன்வரவேண்டும். அப்படியாரும் வரமறுக்கிறார்கள். அப்படி வரும் சிலரும் எங்களிடம் இருந்து பணம்பிடுங்கும் நோக்கத்தோடு வருகிறார்கள். அரசு லஞ்சம் ஊழல் இல்லாமல் எங்களைப் போன்றவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

நக்கீரன் செய்தியின் மூலம் பல லட்சம்பேர் பலனடைந்துள்ளனர். நமது நேரடி நடவடிக்கை மூலம் சில நூறு பேருக்கு உதவித்தொகை கிடைக்க உதவி செய்துள்ளது மனநிறைவான ஒன்று.

இப்படிப்பட்ட நிலையில் அதிமுக அரசு உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் மக்களுக்கு வேட்டுவைக்கும் செய்தியாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக வருவாய் நிர்வாக மேலான்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஜனவரி 29ல் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் சமூகப் பாதுகாப்பு முதியோர் ஓய்வூதியம் பெறும் விதிகளில் தகுதி மாற்றம்செய்யப்பட்டுள்ளது என்றும், அதன்படி 20 வயதுக்கு மேற்ப்பட்டமகன் பேரன் கணவர், மனைவி, என்ற உறவுகள் இல்லாதவர்கள் ஒருலட்சம் ரூபாய்க்கு குறைவான மதிப்புள்ள அசயா சொத்து உள்ளவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்க பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் அவர்கள் வறுமை கோட்டுக்குள் இருக்க வேண்டும் இப்படிப்பட்டவர்களையே கைவிடப்பட்டோர் வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் என்று அறிவிப்பில் உள்ளது.

2007 ல் கலைஞர் முதல்வராக இருந்து போடப்பட்ட உத்தரவுக்கு எதிராக அதை ரத்து செய்யும் வகையில் இந்த சுற்றறிக்கை அமைந்துள்ளது. இது உதவிகேட்டு கரம் நீட்டும் முதியோர்களுக்கு வேட்டு வைக்கும் அறிவிப்பாக உள்ளது என்ற கலக்கத்தில் உள்ளனர் காத்திருக்கும் முதியோர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT