புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் கடந்த மாதம் வெறி நாய் ஒன்று 6க்கும் மேற்பட்டோரையும் பல கால்நடைகளையும் கடித்தது. அதேபோல வடகாடு கிராமத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 ஆடுகளை நாய்கள் கடித்துக் குதறிக் கொன்றுள்ளது. இதனால் ஊராட்சி நிர்வாகம் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் இன்று வடகாடு, குந்தடிபுஞ்சை பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலச்சந்தர் தனது தோட்டத்தில் கயிற்றில் கட்டி வைத்திருந்த 8 ஆடுகளை அந்தப் பக்கமாக வந்த நாய்கள் கடித்துக் குதறிக் கொன்று போட்டுள்ளது. மாலையில் போய் பார்த்த பாலச்சந்தர் குடும்பத்தினர் குதறப்பட்டுக் கிடந்த ஆடுகளைப் பார்த்துக் கதறி அழுதனர். இதனையடுத்து பாலச்சந்தரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நாய்கள் கடித்துக் குதறிய ஆடுகளைத் தூக்கிக்கொண்டு வந்து வடகாடு கடைவீதியில் பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் ஆடுகள் தொடர்ந்து நாய்களுக்கு இரையாவது வேதனையளிக்கிறது. இந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.