ADVERTISEMENT

டாக்டர்களிடையே தொழில் முன்விரோதம்: சம்மனை எதிர்த்து பல் மருத்துவர் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

07:42 AM Sep 30, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தொழில் முன்விரோதத்தால் இரு தரப்பு டாக்டர்களிடையே நடந்த பிரச்சனையில், கீழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை எதிர்த்து, பிரபல பல் மருத்துவர் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பிரபல பல் டாக்டர்களான குணசீலன், பாலாஜி ஆகிய இருவரும் இந்திய பல் மருத்துவர்கள் ஆராய்ச்சி சங்கம் மற்றும் சர்வதேச பல் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2013- ஆம் ஆண்டு, பார்சிலோனாவில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் டாக்டர் குணசீலன் கலந்துகொண்டு நாடு திரும்பிய நிலையில், அவரது நண்பரான டாக்டர் கிஷோர் நாயக் என்பவருக்கு வந்த மின்னஞ்சலில், டாக்டர் குணசீலனைப் பற்றி அவதூறான செய்திகள் இடம் பெற்றிருந்தன.

இதையடுத்து, அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், இ-மெயிலை உருவாக்கிய டாக்டர் பாலாஜி மருத்துவமனையின் ஊழியர் ஜெயப்பிரகாஷ் மற்றும் டாக்டர் பாலாஜி ஆகியோர் மீது அவதூறு பரப்புதல், தவறான தகவலைப் பரப்பி மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


இந்த வழக்கில், காவல்துறை விசாரணை நடத்தி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, டாக்டர் பாலாஜி, ஜெயபிரகாஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கடந்த 2018- ஆம் ஆண்டு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை எதிர்த்து, டாக்டர் பாலாஜி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், டாக்டர் பாலாஜி அந்த இ-மெயிலை அனுப்பவில்லை என்றும், தவறாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், வழக்கில் முகாந்திரம் உள்ளதாகவும், உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் எடுத்துரைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளதாக கீழமை நீதிமன்றம் கருதியதாலேயே அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும், மனுதாரர்கள் இருவரும் நவம்பர் 2- ஆம் தேதி சைதாப்பேட்டை 11- வது மாஜிஸ்திரேட் முன் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டு, சம்மனை எதிர்த்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT