கைதான மீனவர்கள் 19 பேரும் விசாரணைக்காக காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையைத் தொடர்ந்து மீனவர்கள் 19 பேரையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் 11ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. ராமேஸ்வரத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.