உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாகவும், தமிழகம் முதல் மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் அவதூறு கருத்துக்கள் தெரிவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதுபோல, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விமர்சித்தது என ஸ்டாலினுக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் நேற்று (17/02/2020) விசாரணைக்கு வந்தபோது, முதல்வரை விமர்சித்தது, குடியுரிமைச் சட்டம் தொடர்பாக அரசை விமர்சித்தது ஆகிய இரு வழக்குகளில் மார்ச் 4-ம் தேதியும், உள்ளாட்சித்துறை அமைச்சரை விமர்சித்தது தொடர்பான வழக்கில் மார்ச் 24-ம் தேதியும் நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.