“ஆணவப்பேச்சு யாரு பேசுறாங்க? எடப்பாடி அண்ணனா பேசுறாரு? இருக்கிற அரசியல்வாதிகள்ல வெளிப்படைத்தன்மையா பேசக்கூடியவர்... உண்மைத்தன்மையா பேசக்கூடியவர்... மனிதநேயத்துடன் பேசக்கூடியவர்.. எல்லாரையும் மதிக்கக்கூடிய அன்பானவர் எடப்பாடியார். இது உலகம் அறிந்த உண்மை. அவர் கூட பழகியவர்கள் அறிந்த உண்மை. ஆனால்.. ஸ்டாலின் பற்றி தி.மு.க நிர்வாகிகள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர் மற்றவர்களைக் குறை கூற வேண்டும். ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் எடப்பாடியாரை மையப்படுத்தி தாக்கினால்.. ஓபிஎஸ்ஸை மையப்படுத்தி தாக்கினால்.. அதிமுக பிரிவுபட்டு விடும்; பிளவுபட்டு விடும்; சிதைந்துவிடும்; அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்ற கணக்கோடு, இருபெரும் தலைவர்களையும் கடுமையாகத் தாக்கிப் பேசுகிறார்.
அவருடைய நாடகம் எடுபடாது. எடப்பாடியார் ஆணவப்பேச்சு எப்போதும் பேசியது கிடையாது. நாடாளுமன்ற தேர்தலிலே ஒரு பொய்யான வாக்குறுதியைச் சொல்லி அவர் பெற்ற வெற்றியை வைத்து எந்த அளவுக்கு தம்பட்டம் அடித்தார்கள். இந்த ஆட்சியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். முதலமைச்சர் வீட்டுக்குப் போக வேண்டும் என்று எந்த அளவுக்கு கொக்கரித்தார்கள் என்பதை ஊரறியும். ஆணவத்தின் உச்சத்திலே ஸ்டாலின் பேசினார். ஆனால், அடக்கத்தோடு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப கருத்து சொல்லக்கூடியவராக இருக்கிறார் எடப்பாடியார். மிகத் தேர்ந்த அரசியல் தலைவராக இன்றைக்கு எடப்பாடியார் விளங்குகிற காரணத்தால், அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் புலம்ப ஆரம்பித்துவிட்டார் ஸ்டாலின். அவரால் இனி புலம்பத்தான் முடியும். பொறுப்பான இடத்துக்கு வரக்கூடிய வாய்ப்பை தமிழக மக்கள் தரவே மாட்டார்கள்.
ஸ்டாலின் கடந்த காலத்தை மறந்துவிட்டார். தாமிரபரணி ஆற்றங்கரையில் பச்சைக்குழந்தைகளோடு ஊர்வலம் போன எத்தனையோ ஏழைப் பெண்களை தண்ணீருக்குள் அமுக்கிக் கொன்றார்கள். குழந்தை சுஜித் குழிக்குள் விழுந்தவுடன் 5 அமைச்சர்கள் 5 நாட்களாக அங்கே முகாமிட்டார்கள். முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆலோசனை பெற்று அரசு எந்த அளவுக்குப் பணியாற்றியது என்பதை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள், இந்தியர்கள் அத்தனைபேரும் அறிவார்கள். இன்றைக்கு வைகோ, திருமாவளவன் பேட்டிகூட பார்த்தேன். தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை பாராட்டியிருக்காங்க. ஸ்டாலின் ஒருவர் மட்டும் பாராட்ட மாட்டார். அவருக்குப் பாராட்டுவதற்கு மனம் கிடையாது. விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் வெற்றியால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உருவாகியிருக்கிறது. திமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு சேர்வு ஏற்பட்டிருக்கிறது. ஸ்டாலின், தன்னைத் திருத்திக்கொண்டால் தமிழக மக்களால் மதிக்கப்படுவார். தொடர்ச்சியாக இதுபோலவே செய்துகொண்டிருந்தால், தமிழக மக்களால் முற்றிலும் ஓரம்கட்டப்படுவார்.