ADVERTISEMENT

பேரூராட்சி மன்ற கூட்டத்தில் செயல் அலுவலரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

09:10 PM Jun 30, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அறிஞர் அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பேரூராட்சி மன்றத்தலைவர் பிரதீபா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்தி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் நந்தகுமார் வரவேற்றுப் பேசினார். முதன்மை உதவியாளர் சசிக்குமார் தீர்மான நகலை வாசித்தார். கூட்டத்தில் 10 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. பிறப்பு, இறப்பு தீர்மானம் மற்றும் நிதியிருப்பு தீர்மானம் வாசித்த பின்பு 5வது தீர்மானமாகப் பொதுநிதியின் கீழ் வடிகால் சிறுபாலங்கள், பேரூராட்சி அலுவலகத்திற்கு வர்ணம் பூசுதல், நவீன கழிப்பறையை மராமத்து செய்தல், சிக்கனம்பட்டி அங்கன்வாடி மையத்தைப் பழுது நீக்கம் செய்தல் தீர்மானம் வந்தபோது ஒட்டுமொத்தமாக அனைத்து கவுன்சிலர்களும் பேருந்து நிலைய கழிப்பறை மராமத்து பணிக்கு 8 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது நடந்த விவாதங்களில் திமுக வார்டு உறுப்பினர் ஜெயகிருஷ்ணனோ, " கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் 80 ஆயிரம் செலவு செய்து கழிப்பறையைப் பராமரித்தார்கள். இப்போது அதே கழிப்பறையைப் பராமரிக்க 8 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். புதிதாகக் கட்டிடம் கட்டினாலே 8 லட்சம் செலவாகாது. பேரூராட்சி பொறியாளர்கள் செய்யும் முறைகேடுகளுக்கு நாங்கள் உடன்பட மாட்டோம். ஒரு லட்சம் கொடுத்தால் நான் கழிப்பறையில் பராமரிப்பு பணிகளைச் செய்து காட்டுகிறேன் என்றார். அதற்குச் செயல் அலுவலரோ, பொறியாளர்கள் சொன்னதை வைத்துத்தான் மதிப்பீடு போட்டுள்ளோம்" என்றார்.

அதற்கு தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் கடந்த நான்கு மாதமாகப் பேரூராட்சி மன்றம் மூலம் 55 புதிய வீடுகள் கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் வழங்கி உள்ளீர்கள். இதுகுறித்து அந்த வார்டு உறுப்பினருக்கு எந்த தகவலும் நீங்கள் தெரிவிப்பதில்லை. அப்ரூவல் வாங்கியவர்கள் வீட்டைக் கட்டிவிட்டு தெருவில் வாசற்படியைக் கட்டுகிறார்கள். இதனால் தெருக்களில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது என்றனர். அதற்கு செயல் அலுவலர் நந்தகுமார், பிளான் அப்ரூவல் குறித்து வார்டு உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றவுடன், அனைத்து கவுன்சிலர்களும் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியதாவது,

ராஜு (திமுக) : வார்டில் உள்ள பூங்காவில் திமுக கவுன்சிலர் ஆக்கிரமிப்பு செய்கிறார் என்று அதிகாரிகள் கூட்டமாக வந்து ஆக்கிரமிப்பை அகற்றினீர்கள். ஆனால் பூங்காவிற் கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தனி நபர் பூச்செடிகளை நட்டு விவசாயம் செய்து வருகிறார். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதுபோல பூங்கா அருகே வீடு கட்டுபவர்கள் பூங்கா இடத்தை ஆக்கிரமித்து கட்டி வருகின்றனர். அதற்கு தனியாகப் பேரூராட்சி பணியாளர்கள் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்.

ராஜசேகர், (தி.மு.க.): கடந்த மூன்று மாதமாக சின்னாளபட்டி நகர மக்களுக்கு குடிதண்ணீர் எவ்வித சுத்தமும் இல்லாமல் அசுத்தமாக விநியோகம் செய்கிறீர்கள். கேட்டால் பைப் உடைந்துவிட்டது. அதன் வழியாகக் கழிவுநீர் கலந்து விட்டது என்கிறீர்கள். பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்குவதைத் தவிர வேறு உங்களுக்கு என்ன வேலை இருக்கிறது. பொது மக்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.

செயல் அலுவலர் - இனி முறையாக சுத்தமான குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சாந்தி கணேசன் (திமுக) : வார்டுகளில் சுத்தம் செய்ய வருபவர்கள் பிளீச்சிங் பவுடரோ, பினாயிலோ தெளிப்பது கிடையாது. கேட்டால் பேரூராட்சி நிர்வாகம் வாங்கிக் கொடுக்கவில்லை எனத் துப்புரவுப் பணியாளர்கள் சொல்கிறார்கள்.

செயல் அலுவலர்: டென்டர் விட்டாச்சு, விரைவில் பொருட்கள் விநியோகம் ஆகும்.

ஜெயகிருஷ்ணன் (திமுக) : பேரூராட்சி அலுவலகம் முழுவதும் ஒப்பந்தக்காரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. கட்சி தொண்டர்களோ, வார்டு உறுப்பினர்களோ பேரூராட்சி அலுவலகம் வந்தால் ஒப்பந்தக்காரர்கள் விரட்டுகிறார்கள். இனி பணி செய்யும் இடத்தைத் தவிர ஒப்பந்தக்காரர்கள் அலுவலகத்திலேயே முகாமிட்டால் பொதுமக்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம். முடிந்தால் பேருந்து மறியல் செய்வோம்.

செயல் அலுவலர் : ஒப்பந்ததாரர்களிடம் இனி பேசி குறிப்பிட்ட நேரத்தில் வரும்படி சொல்கிறேன்.

செல்வக்குமாரி (திமுக) : இதுவரை நான்கு முறை கூட்டம் நடத்தி டெண்டர் விட்டீர்கள். பொதுநிதியிலிருந்து கழிப்பறையைப் பராமரிக்க, அங்கன்வாடியைப் புதுப்பிக்க, அலுவலகத்திற்கு வர்ணம் பூச அனுமதி கேட்கிறீர்கள். இதற்கெல்லாம் செலவு செய்ய பொதுநிதி இருக்கும். பொதுமக்களைப் பாதிக்கக்கூடிய தரைப்பாலம், வடிகால் கட்டுவதற்குக் கேட்டால் பணம் இல்லை என்று கூறுகிறீர்கள். வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி சொல்லக்கூட தெருப்பக்கம் செல்லமுடியவில்லை, எனது வார்டு பகுதியில் உள்ள அனைத்து தரைப்பாலங்களையும் சீரமைக்க வேண்டும்.

விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது செலவின சீட்டுக்களைப் பார்வையிட்ட பின்பும், யார் யாருக்கு யார் மூலம் வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் வழங்கப்பட்டது என்று தெரியாமல் 6வது தீர்மானத்தை வாசித்தபோது தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் வேல் விழி, செல்வக்குமாரி, தாமரைச்செல்வி, காமாட்சி, ராஜாத்தி, சாந்தி, ராசு, ஹேமா, லட்சுமிகுமர கண்ணன், சாந்தி உட்பட 10 தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்தனர்.

மொத்தம் 18 தி.மு.க. வார்டு உறுப்பினர்களில் 10 பேர் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் தனி அலுவலர் காலத்தில் நடந்தது போல் இப்போதும் தங்கள் இஷ்டம் போல் செயல்படுவதால் உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT