சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (12/04/2022) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சமூகநீதிப் பாதையில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்க எத்தனையோ முயற்சி எடுத்தாலும் ஆங்காங்கே சில பிரச்சனைகள் நடக்கின்றன. வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை நந்தனத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் புதிய மாணவர் விடுதி அமைக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளில் ரூபாய் 123 கோடியில் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும். சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது" எனத் தெரிவித்தார்.