ADVERTISEMENT

"உழவர்களை கண்போல் பாதுகாக்கும் அரசு தான் தி.மு.க. அரசு"- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

08:33 PM Nov 13, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையினால் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மட்டுமின்றி சம்பா, தாளடி செய்திருந்த விவசாய நிலப்பரப்பிலும் மழைநீர் தேங்கி அழுகும் நிலையானது. டெல்டா மாவட்டங்களில் 50,000 ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருக்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழு டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

இந்தச் சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக ஆய்வு செய்யப் போகிறார் என திடீரென அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13/11/2021) பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் வழியாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தவர். சீர்காழி அடுத்துள்ள கொள்ளிடம் அருகே உள்ள இருக்கூர் கிராமத்திற்கு வந்து, அந்த பகுதியில் மழையில் மூழ்கியிருந்த பயிர்களைப் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். அங்கிருந்து தரங்கம்பாடிக்குச் சென்று பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அங்கிருந்து நாகை மாவட்டம் அடுத்துள்ள கருங்கண்ணி கிராமத்திற்கு வந்தவர், அங்கு மழை நீரில் மூழ்கியுள்ள சம்பா பயிர்களை நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த விவசாயிகளை சந்தித்துப் பேசினார். இது குறித்து விவசாயி வீரமணி என்பவரிடம் கேட்கும்போது,"வருடா வருடம் மழையால் அழிவதே எங்க நிலமையாகிடுச்சி, ஒவ்வொரு வருடமும் நடவு செய்து பயிரானபிறகே மூழ்கி அழுகும். இந்த வருடம் நடவு செய்த நாளில் இருந்தே மழை பெய்து மூழ்கடிச்சிடுச்சி" என கலங்கியபடி கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அருந்தவபுலம் கிராமத்திற்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை நீரில் சேதமடைந்த நெற்பயிர்களின் பாதிப்புகள் குறித்து அங்கிருந்த விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை, அரிசி, உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், கனமழை காரணமாக வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்குப் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆணையினையும் கையோடு வழங்கினார்.

அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு வந்தவர். கனமழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தாலுகாவின் ராயநல்லூர் மற்றும் புழுதிக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்துவிட்டு, பின்னர் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார். அதோடு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு மனைபட்டா, கூரை வீடு பகுதி சேதம், கால்நடை இறப்பு, உள்ளிட்ட 12 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கனமழை காரணமாக, தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை அறிந்திருப்பீர்கள். முதல்வராகிய நான், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

நீர்வளத்துறை, ஊரக உள்ளாட்சித்துறை சார்பில் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஆட்சிக்கு வந்த உடனே டெல்டா மாவட்டங்களில் 4,000 கி.மீ. தூர்வாரப்பட்டது. இதனால் மழைநீர் பெருமளவில் தேங்காமல் தடுக்கப்பட்டது. உழவர்களைக் கண்போல் பாதுகாக்கும் அரசு தான் தி.மு.க. அரசு. கடந்த நான்கு மாதங்களில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல் மீண்டும் நடக்கக் கூடாது என்கிற வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சென்னையில் இதுவரை 400 இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தி.மு.க. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகப் பெருமளவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசு செயல் பட்ட விதத்தை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தமிழ்நாடு அரசு நிரந்தர தீர்வை எடுத்துக் கொண்டு வருகிறது. சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு புவியியல் அமைப்பு தொடர்பான ஆய்வு செய்து அறிக்கை தரும்.

அதேபோல், டெல்டா மாவட்டங்களில் வெள்ள தடுப்பைத் தடுக்க நிரந்தர தீர்வு எடுக்கப்படும். டெல்டா மாவட்டங்களைப் பொறுத்த வரை தூர்வாரும் பணி நடைபெற்ற காரணத்தால் தான் பெருமளவு சேதம் தடுக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு நீட்டிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்த வித பதிலும் இதுவரை வரவில்லை." இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT