கடந்த தேர்தலைவிட இந்த தேர்தல் களத்தில் 17 பேர் விருப்ப மனு வாங்கி நேர்காணலிலும் கலந்து கொண்டு வந்து விட்டனர். அவர்களில் ஒருவரைத் தான் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணியும் பரிந்துரை செய்ததின் பேரில், திமுக தலைவர் ஸ்டாலின் அவரை வேட்பாளராக அறிவிப்பார் என்ற அடிப்படையில்தான் ஒட்டுமொத்த தொண்டர்களும் இருந்து வந்தனர். அதோடு மீண்டும் இத்தொகுதியில் சூரியன்தான் உதிக்குமே தவிர கூட்டணிக் கட்சிக்கு தொகுதி என்ற பேச்சே கிடையாது. அதுவும் கடந்த முறையை விட இந்த முறை இந்தியாவிலேயே அதிக ஓட்டு வாங்கி முதல் இடத்தை பிடித்து தலைவரிடமும் பாராட்டைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு அமைச்சர்களும் இப்பொழுதே தேர்தல் களத்தில் உடன்பிறப்புகளை உசுப்பி விட்டு இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்துதான் தொகுதிகளில் இப்பொழுதே உதயசூரியன் சின்னத்தையும் உடன்பிறப்புகள் வரைந்து வந்தனர்.
அதுபோலவே இந்த முறையும் இரண்டு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் கோயம்புத்தூர் தொகுதியில் இந்தமுறை போட்டி போடாமல் திண்டுக்கல் தொகுதியில் சி.பி.எம்.போட்டியிடுகிறது.
இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் சிலரிடம் கேட்டபோது, 'எங்களுக்கு எப்போதும் போல் மதுரையும் கோவையும் ஒதுக்கி விடுங்கள் என்று சொல்லி தான் இரண்டு தொகுதிகளுக்கு ஒப்பந்தமும் போட்டு இருக்கிறோம். அப்படி இருக்கும் போது இப்ப திடீரென கோயமுத்தூரை விட்டுவிட்டு திண்டுக்கல் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு கோயம்புத்தூர் தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் அந்த தொகுதியில் போட்டியிடுவது எளிது. இதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என்று புரியவில்லை. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆத்தூர், திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் திண்டுக்கல், பழனி சட்டமன்ற தொகுதிகளில் தான் கட்சி வளர்ச்சி இருக்கிறது. அதுபோல் மற்ற தொகுதிகளில் சரிவர கிளைகள் இல்லை. கட்சி வளர்ச்சி என்பது பெரிதாக ஒன்றுமில்லை. இந்த ஆறு தொகுதிகளில் மூன்று தொகுதிகள் ஆளுங்கட்சியான தி.மு.க.விடமும் மற்ற மூன்று தொகுதிகள் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.விடமும் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ஆளுங்கட்சியை சேர்ந்த தி.மு.க. இத்தொகுதியில் போட்டி போட்டால் தான் வெற்றி பெற முடியுமே தவிர, நாங்கள் போட்டியிட்டால் வெற்றி என்பது கேள்விக்குறியாக தான் இருக்கும்.
இந்த விஷயம் கேள்விப்பட்ட உடனே, இரண்டு அமைச்சர்களுமே திமுக கோட்டையாக உள்ள தொகுதியை எப்படி தலைமை, கூட்டணி கட்சிக்கு ஒதுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் வேண்டாம் என்று கூறியும் வலுக்கட்டாயமாக இத்தொகுதியில் போட்டி போட சொல்வதற்கு என்ன காரணம் என்ற கேள்வியையும் ஒருபுறம் எழுப்பி வருகின்றனர். இதனால் கூட்டணிக்குள் இருந்து வந்த உறவும் தொகுதி பிரச்சனையின் மூலம் பாதமாக அமையக்கூட வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்கள்.
இந்த திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் மாறி மாறி வெற்றி பெற்று இருக்கிறது. தவிர இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தொகுதியில் போட்டி போடவில்லை. ஆளுங்கட்சியான திமுகதான் இங்கு பலமாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது திமுக வேட்பாளரை, தலைமை களத்தில் இறக்காமல் கூட்டணி கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கி இருப்பது உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், தி.மு.க. கூட்டணி கட்சியான சி.பி.எம். இங்கு போட்டியிடுவதால், தி.மு.க.வினர் தங்கள் கட்சி வேட்பாளருக்கு வேலை செய்வது போலவே வேலை செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. முன்னோடிகள் தெரிவிக்கின்றனர்.