ADVERTISEMENT

‘2015 பெருவெள்ளத்திற்குப் பிறகும் பாடம் கற்கவில்லையே?’ - சட்ட விரோதக் கட்டுமான வழக்கில் அதிகாரிகளை எச்சரித்த நீதிபதிகள்!

08:18 PM Nov 24, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


சட்ட விரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக, எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ருக்மாங்கதன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, 5-ஆவது மண்டலமான ராயபுரத்தில், 5,574 விதிமீறல் கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், 1,161 கட்டடங்களைப் பொறுத்தவரை, கட்டடப் பணிகளை நிறுத்திவைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 679 வீடுகளுக்கு சீல் வைப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 115 கட்டடங்களுக்கு சீல் வைக்கபட்டுள்ளது. மீதமுள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள், குறிப்பிட்டு தேர்ந்தெடுத்த கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பின், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. 5 -ஆவது மண்டலமான இராயபுரத்தில் மட்டும், 5,574 விதிமீறல் கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும், சென்னை முழுவதும் 75ஆயிரம் முதல் 1 லட்சம் வரை விதிமீறல் கட்டங்கள் இருக்கலாம். எனவே, 5 -ஆவது மண்டலத்தில் உள்ள 5,574 சட்ட விரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென' கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘சட்ட விரோதக் கட்டடங்களுக்கு எதிராகப் பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இது தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்..’ என எச்சரித்தனர்.

மேலும், ‘சென்னையில் 5 -ஆவது மண்டலத்தில் மட்டும் இவ்வளவு விதிமீறல்கள் என்றால், தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருக்கும். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது, அரசுத்துறை தலைவர்கள் கண்காணிக்கத் தவறிவிட்டதையே காட்டுகிறது. 2015 பெருவெள்ளத்திற்குப் பிறகும் பாடம் கற்கவில்லை.’ என நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.

மேலும், மனு தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர், 5 -ஆவது மண்டல உதவி ஆணையர் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 22 -ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT