ADVERTISEMENT

குடிக்க பணம் தரவில்லை; மனைவியைக் கொலை செய்த கணவன்!

06:00 PM Sep 28, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

குடிக்க பணம் தர மறுத்த மனைவியை வெட்டிக் கொன்று, கணவனும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் திருமக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள கிராமம் வடக்கு தென்பரை. அந்த கிராமத்தின் வடக்குத் தெருவை சேர்ந்தவர் பாலுச்சாமி (63), இவருடைய மனைவி மாரியம்மாள் (57). இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் என ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர்.

பாலுச்சாமிக்கு அதிக குடிபழக்கம் இருந்திருக்கிறது. அடிக்கடி மது குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்ததும் ஏதாவது காரணம் கூறி மனைவி மாரியம்மாளை அடித்து உதைப்பதோடு, தகாத வார்த்தைகளால் திட்டுவதையும் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

இந்நிலையில், பாலுச்சாமி குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி மாரியம்மாளிடம் சண்டை போட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என மாரியம்மாள் கூறிவிட்டு, அருகில் உள்ள வயல் காட்டிற்கு மேய்சலுக்காக ஆடுகளை ஒட்டிக்கொண்டு சென்றுவிட்டார். மது குடிக்க மனைவி பணம் தராத ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற பாலுச்சாமி, தன்னிடம் இருந்த பணத்தில் குடித்துவிட்டு, ஆவேசமாக வீட்டுக்கு வந்தவர், அங்கிருந்த அரிவாளை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டு மனைவியைத் தேடி வயலுக்குச் சென்றுள்ளார். அங்கு, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மாரியம்மாளிடம் தகறாரில் ஈடுபட, கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஆத்திரமடைந்த பாலுச்சாமி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரியம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாரியம்மாள் துடிதுடித்ததைப் பார்த்துப் பயந்துபோன பாலுச்சாமி வேகவேகமாக வீட்டுக்கு வந்து வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமக்கோட்டை காவல்துறையினர் மாரியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முயன்ற பாலுச்சாமியை மீட்ட போலீசார் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT