ADVERTISEMENT

ஆம்புலன்ஸ் டிரைவர் பார்த்த பிரசவம்- குழந்தையின் குரலை கூட கேட்காமல் மரணித்த தாய்!

08:05 PM Aug 06, 2019 | kalaimohan

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி இருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்-ஜமுனா தம்பதி. இந்த தம்பதியினருக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஜமுனா கொஞ்சம் தாமதமாக கர்ப்பமடைந்துள்ளார். இது தலைபிரசவம் என்பதால் அந்த கிராமத்துக்கு உட்பட்ட மாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பதிவு செய்து பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 5ந் தேதி மாலை ஜமுனாவுக்கு பிரசவவலி வந்துள்ளது. உடனடியாக அவரது உறவினர்கள் அவரை அழைத்து வந்து மாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களும் அவரை அனுமதித்துள்ளனர். மாலை அவருக்கு திடீரென பிரசவ வலி அதிகமாகியுள்ளது. அப்போது அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லையாம். இதனால் அங்கிருந்த வார்டு பாய் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சில மருந்துகளும் அவருக்கு செலுத்தியுள்ளனர். சிறிது நேரத்தில் ஜமுனா ஒரு ஆண் குழந்தையை பெற்று எடுத்துள்ளார். அதோடு ரத்தப்போக்கு அதிகமாக இருந்துள்ளது. பிரசவ அறையை விட்டு வெளியே வரும் முன்பே ஜமுனா இறந்துள்ளார். இந்த தகவல் மருத்துவமனையில் காத்திருந்த உறவினர்களுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்து அழுதுள்ளனர்.

உடனடியாக ஜமுனாவின் உடலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மருத்துவர்கள் இல்லாமல், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை உதவியாளர், ஒரு நர்ஸ் பிரசவம் பார்த்ததால் தான் ஜமுனா இறந்தார் என அவரது உறவினர்கள், குடும்பத்தார் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர் மருத்துவ அதிகாரிகள். காவல்நிலையத்திலும் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையோ நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டிவருகிறது என்கின்றனர் ஜமுனாவின் குடும்பத்தாரும், உறவினர்களும்.

அரசு மருத்துவரின் பொறப்பற்றத்தனம், ஊழியர்களின் அலட்சியம் போன்றவை ஒரு பச்சிளம் குழந்தையின் தாயின் உயிரை பறித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT