ADVERTISEMENT

கடலூர்: என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் பலியானோருக்கு இழப்பீடு வழங்குவதில் இழுபறி! தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

09:03 AM May 11, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் மே 07- ஆம் தேதி இரண்டாவது அணு மின் நிலைய பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 6- வது அலகில் பாய்லர் வெடித்தது. இதில் அப்பகுதியில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் உள்பட 8 பேர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் என்.எல்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களை மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.


தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது சர்புதீன் என்ற நிரந்தர தொழிலாளி மே 08- ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த சர்புதீன் குடும்பத்துக்கு 15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். இந்நிலையில் இதே விபத்தில் சிக்கிய நாயினார்குப்பம் சண்முகம் என்பவர் நேற்று (10/05/2020) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒப்பந்தத் தொழிலாளரான சண்முகம் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் மற்றும் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் என 300- க்கும் மேற்பட்டோர் இரண்டாவது அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.


அதையடுத்து என்.எல்.சி அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உயிரிழந்த குடும்பத்திற்கு போதிய நிவாரணம் மற்றும் நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று (11/05/2020) காலை 06.00 மணிக்கு ஷிப்ட் வேலைக்குச் செல்லும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் இன்கோர்சர்வ் தொழிலாளர்கள் சுமார் 700- க்கும் மேற்பட்டோர் பணியைப் புறக்கணித்து இரண்டாவது அனல் மின் நிலையத்தின் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் மற்றும் முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT