ADVERTISEMENT

கள்ளக் கூட்டணியா? - ராமதாஸ் மீது துரைமுருகன் ஆவேசம்

10:13 PM Jul 16, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைப்பது போல் மறைக்க முயற்சித்து, தி.மு.க. ஏதோ பாட்டாளி மக்கள் கட்சியை வஞ்சித்து விட்டது போலவும் - திமுக தலைவர் கலைஞர் ஏதோ தமிழ்நாட்டைக் கெடுத்து விட்டார் என்பது போலவும் டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியை, எந்த ஒரு தி.மு.க. தொண்டனும் மட்டும் அல்ல – பா.ம.க.வில் உள்ள உண்மையான தொண்டர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன். இது குறித்த அவரது விரிவான அறிக்கை:

ADVERTISEMENT

பாட்டாளி மக்கள் கட்சியின் முப்பதாவது ஆண்டு விழாவையொட்டி, நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் “கூட்டணியில் இருந்தாலும் தி.மு.க.வும் அதிமுகவும் தங்களுக்குள் கள்ளக் கூட்டணியை உருவாக்கி எங்களைத் தோற்கடித்தார்கள்” என்று மனசாட்சியை வங்காள விரிகுடா கடலில் தூக்கியெறிந்து விட்டு டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியில் இருந்த நேரங்களில் எல்லாம் சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி, தனது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு மாநிலங்களவைப் பதவியையும் வாங்கிக் கொண்டு, தலைவர் கலைஞரின் ஆதரவில் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சராகவும் பதவியேற்றதை எல்லாம் வசதியாக மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு , தி.மு.க.வின் மீது வஞ்சக எண்ணத்துடன் நச்சுக் குற்றச்சாட்டைச் சுமத்தியிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“பெரியார் அண்ணாவிற்குப் பிறகு உள்ள திராவிடக் கட்சிகள் எனக்கு உடன்பாடு இல்லை” என்று கூறியிருக்கும் டாக்டர் ராமதாஸ், 1999, 2004 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களிலும், 2006, 2011 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்த போது, “திராவிடக் கட்சி மீது உடன்பாடு இல்லாமல்தான் கூட்டணி” வைத்தாரா? அப்படியென்றால் அந்தத் தேர்தல்களில் பா.ம.க.விற்கும் செல்வாக்குள்ளதாகக் கருதப்படும் தொகுதிகளில் தி.மு.க. தோற்றதே, அதற்கு அதிமுகவுடன் அவர் வைத்துக் கொண்ட “கள்ளக் கூட்டணி”தான் காரணமா?. ஊழலை ஒழிக்க முதன் முதலில் தமிழ்நாட்டில் சட்டம் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் என்பதையும்,மதுவிலக்கை அமல்படுத்துவதில் அக்கறை எடுத்துக் கொண்டு, மது பானக்கடைகளின் எண்ணிக்கையையும் குறைத்து, விற்பனை நேரத்தையும் அதிரடியாகக் குறைத்தவர் தலைவர் கலைஞர் என்பதையெல்லாம் மறந்து விட்டு, நெஞ்சத்தில் நஞ்சுடன் “தமிழ்நாடு ஊழல் மாநிலமாக, குடிபோதை மாநிலமாக மாறக் காரணம்” என்று சந்தர்ப்பவாத அரசியலுக்காக, அபாண்டமாகப் பழி சுமத்தியுள்ள டாக்டர் ராமதாஸ் அவர்கள்,அரசே சாராயத்தை விற்கும் என்று ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகளை திறந்த அதிமுக அரசைக் குறை கூறி வாய்திறக்கத் தயங்குவது ஏன்?

இது எந்த மாதிரியான கள்ள உறவு? அல்லது எதிர்காலக் கள்ள உறவுக்கு அடிக்கல் நாட்டுகிறாரா? ஊழல் புகாரில் சிக்குண்டு நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் தனயனை மடியில் வைத்துக்கொண்டு, டாக்டர் அவர்கள் ஊழலைப்பற்றி ஓங்கிப் பேசுவதுதான் நகைமுரண். மாறிவரும் அரசியல் தட்பவெப்ப நிலைமைகளுக்கேற்ப,தி.மு.க.வில் தொடங்கி அதிமுக பா.ஜ.க. வரை அனைத்துக் கட்சிகளுடனும் இந்த 30 வருட காலத்தில் அவ்வப்போது கூட்டணி வைத்து அபரிமிதப் பயனடைந்ததில் அழியாத சரித்திரம் படைத்த டாக்டர் ராமதாஸ் அவர்கள்,இப்படி நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து தடம்புரளாமல் இலட்சியப் பயணம் மேற்கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், அதனை 94 வயதிலும் வழி நடத்திச் செல்லும் தலைவர் கலைஞர் மீதும், கடந்த காலத்தை மறந்து,போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதற்குக் காரணம், கழகத்தின் வளர்ச்சியையும், தலைவர் கலைஞருக்கு இருக்கும் மாறாப் புகழையும் பொறுத்துக் கொள்ள முடியாத பொறாமை மனம்தான் என்பது,தி.மு.க. தொண்டர்களின் உழைப்பில் வெற்றி கண்டு, பதவி சுகத்தையும் அனுபவித்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரின் பேட்டியில் எதிரொலிக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி 30 ஆண்டு காணலாம். ஆனால் வன்னியப் பெருமக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து,அவர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டை அளித்த தலைவர் கலைஞர் அவர்களால்தான் இன்றைக்கு சமூக நீதிக்காக உழைத்தோம் என்று பேசும் வாய்ப்பு டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. மத்திய அமைச்சராக அதைச் சாதித்தோம் இதைச் சாதித்தோம் என்று பேசும் வாய்ப்பும் தி.மு.க. அளித்த ஆதரவில் அன்புமணி ராமதாஸ் ராஜ்ய சபை உறுப்பினர் ஆனதால்தான் கிடைத்திருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கும் மிகப்பிற்படுத்தப் பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் குறிப்பிடத்தக்க அளவு கிடைக்கும் அங்கீகாரத்திற்குக் காரணமாக இருப்பவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பதை அவருடைய வாழ்நாள் எதிரிகளாலும் மறைத்துவிட முடியாது. இதையெல்லாம் முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைப்பது போல் மறைக்க முயற்சித்து, திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ பாட்டாளி மக்கள் கட்சியை வஞ்சித்து விட்டது போலவும், தலைவர் கலைஞர் ஏதோ தமிழ்நாட்டைக் கெடுத்து விட்டார் என்பது போலவும் டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியை, எந்த ஒரு திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டனும் மட்டும் அல்ல - பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள உண்மையான தொண்டர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.’’


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT