ஈரோடு மாவட்டத்தில் மே 16 மற்றும் மே 17- ஆம் தேதி என இரண்டாவது நாளாக ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கை குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.
பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். பருத்தியை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும். பஞ்சு ஆன்லைன் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். நூல் விலை உயர்வை உடனே குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி, விற்பனை மற்றும் ஜவுளி சார்ந்த தொழிற்கூடங்கள் மே 16- ஆம் தேதி முதல் மூடப்பட்டன.
ஸ்டிரைக் காரணமாக பன்னீர்செல்வம் பார்க்கில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெறும் ஜவுளி சந்தை மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல ஈரோட்டில் ஜவுளி கடைகள் அதிகம் உள்ள ஈஸ்வரன்கோயில் வீதி, திருவேங்கடசாமி வீதி, டிவிஎஸ் வீதி, காமராஜ் வீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. சென்னிமலை மற்றும் அந்தியூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடங்கள் நூல் விலை உயர்வைக் கண்டித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வைக் குறைக்க ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விலை உயர்வு தொடரும் பட்சத்தில் விரைவில் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கலைச்செல்வன் கூறினார்.
நூல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக நூல் உயர்வை கண்டித்தும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்கக்கோரியும், ஈரோடு மாவட்ட விசைத்தறி மற்றும் பொது தொழிலாளர் சங்கம், ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவுத்தொழிலாளர் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் பேருந்து நிலையம் முன்பாக மே 17 - ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்கு விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தின் வட்டார தலைவர் ஆறுமுகம், கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் வட்டார செயலாளர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். ஏஐடியுசி மாநில செயலாளர் சின்னசாமி கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டது.