நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை ஒட்டி கடந்த ஓராண்டாக சுதந்திரதின அமுதப் பெருவிழா நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு அங்கமாக, இந்தாண்டு பொதுமக்களும் வீடுகள் தோறும் தேசியக்கொடியேற்றி கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
அந்த வகையில் வீடுகள் தோறும் கொடியேற்றுவதற்காக பொதுமக்களுக்கு தேசியக் கொடி விநியோகம் செய்யும் பொருட்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமும், மேலும் பல்வேறு வகையிலும் ஏராளமான எண்ணிக்கையில் தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் திருச்சி மாநகராட்சி சார்பில் சலுகை கட்டணத்தில் தேசியக்கொடி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், திருச்சி மாநகரில் சுமார் 2.75 லட்சம் வீடுகள் உள்ளன. அவற்றுக்காக சுமார் 2 லட்சம் தேசியக்கொடிகளை வழங்க முடிவு செய்யப்பட்டு உற்பத்தி செய்து விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒன்றுக்கு ஒன்றரை அளவுள்ள தேசியக்கொடி ரூ. 21க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாநகராட்சி அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் தொகையை செலுத்தி ரசீதுடன் தேசியக்கொடியை பெற்றுக்கொள்ளலாம்.மேலும் மாமன்ற உறுப்பினர்கள் மூலமும் கொடிகளை விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.