உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் 1,09,400 பேர் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த வைரஸ் தொற்று காரணமாக 3800 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாதம் முதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் கரோனா, தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பால் 19 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் 6 பேர், காஷ்மீரின் லடாக்கில் 2 பேர், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 2 பேர், ஹைதராபாத்தில் ஒருவர், கர்நாடகாவில் நான்கு பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் வைரஸ் பாதிக்கப்பவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து 56 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 62 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் குணமடைந்துள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள நிலையில் கரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசின் முடிவின்படி வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் கப்பல் சென்னை வர மார்ச் 31 ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சென்னை துறைமுகம் அறிவித்துள்ளது.