இந்தியாவில் கரோனாவுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை மார்ச் 31- ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் சுற்றுலாத் தலங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், மூடவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 8 மத்தியச் சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை வழக்கறிஞர்கள், உறவினர்கள் சந்திக்க இரண்டு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைகளில் கைதிகள், காவலர்கள் என அனைவருக்கும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கைதிகள், காவலர்களுக்கு சோப்புகள் தரப்பட்டு உடனுக்குடன் கைகளைச் சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா அறிகுறி தெரியவந்தால் சிகிச்சை தர சிறை மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கைதிகளுக்கு கரோனா பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கை என உச்சநீதிமன்றம் கேட்டிருந்த நிலையில், இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.