மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யும் முடிவை விரைந்து எடுக்க வேண்டுமென ஆளுநரை வலியுறுத்தி, பிப்ரவரி 14- ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி, ஓசூர் நகர காவல் ஆய்வாளரிடம், தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் நகர செயலாளர் ஹரி பிரசாத் மனு கொடுத்திருந்தார்.
அந்த மனுவை பரிசீலித்த காவல்துறை, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்து பிப்ரவரி 13- ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து, மாற்று தேதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி, ஹரி பிரசாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், கரோனா பாதிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்ட பிறகு, காவல்துறையிடம் புதிதாக மனு அளிக்கும்படியும், அதை சட்டத்திற்குட்பட்டு காவல்துறை பரிசீலித்து உரிய முடிவை எடுக்கம்படியும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.